Sunday 17 July 2011

TIME AND TIDE

அகத்தியர் குழுவில் 18/07/11-இல் நான் எழுதியது - 

காலமும் கடற்பெருக்கும் - #1

நேற்று நீண்டநாட்களாகப் போட்ட திட்டங்கள் மூன்று நிறைவேற்றப்படமுடியாமற் போய்விட்டன.
நான்கு குறும்படங்களை எடுப்பதற்காக BigFoot Creations முரளி கிருஷ்ணா கேமரா, 
விளக்குகள் சகிதம் கோலாலும்ப்பூரிலிருந்து சுங்கைப்பட்டாணிக்கு வந்திருந்தார்.
இரண்டு வாரங்களாக உடல் நிலை சரியாக இல்லை. தொண்டைக் கட்டு, கரகரப்பு மாறவில்லை. இடுப்புப் பிடிப்பு. 
மதியம் வரை சமாளிக்க முடியுமா என்று பார்த்தோம். முடியவில்லை. அறவே முடியவில்லை. நான்கும் அருமையான டாப்பிக்குகள். இதுவரைத் யாரும் தொட்ட தில்லை. இப்போதைக்கு யாரும் தொடப்போவதுமில்லை. அவையெல்லாம் எடுத்து வெளியிடப்படவில்லையென்றால் அவை தமிழியத்திற்குப் பெரும் இழப்புத்தான். 
சந்தேகமேயில்லை.
ஆகையால்தான் அவ்வளவு ஆர்வமுடன் அவற்றை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. 
அதான்.
முடியும்போது எதையும் செய்துவிடவேண்டும் என்பது. 
Time And Tide Wait For No Man.
பாவம். முரளி கிருஷ்ணா வெறுங்கையோடு திரும்பினார். கோலாலும்ப்பூரிலிருந்து வந்து சுங்கைப்பட்டாணியில் ரூம் எடுத்துத் தங்கி - ரூம் வாடகை, பெட்ரோல் செலவு, இரண்டு நாட்கள்..... வீணாகிப் போயின.
அதான்.
முடியும்போது எதையும் செய்துவிடவேண்டும் என்பது. 
Time And Tide Wait For No Man.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday 11 July 2011

SETHU MADHAVAN

சேதுமாதவன்


அம்பிகை மதுரையையாண்ட மலயத்துவச பாண்டியனின் யாகத்தில் வந்து தோன்றி அந்தப் பாண்டியரின் மகளாக தடாதகைப் பிராட்டி, என்னும் பெயரில் வளர்ந்து வந்தாள். ஆலவாய் அழகனாகிய சொக்கலிங்கப்பெருமான் மீனாட்சியாகிய தடாதகையை வென்று மணம் புரிந்து இருவரும் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்களாக இருப்பது யாவரும் அறிந்தது.
பாண்டிய மன்னனின் மகளை சிவபெருமான் மணந்த வரலாறுதான் அனவரும் அறிந்தது.
பெருமாளும் இன்னொரு பாண்டியமன்னனின் மகளை மணந்திருக்கிறார்.
சுந்தர பாண்டியன் என்றொரு மன்னன். மதுரையை ஆண்டுவந்தான்.
"பாண்டிய மன்னன் என்றால் மதுரையைத்தானே ஆண்டிருக்கவேண்டும்? அதையேன் தனியாகச் சொல்லவேண்டும்?", என்று யாராவது கேட்கக்கூடும்.      
         தனியாகத்தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஐந்து பாண்டியர்கள் ஐந்து இடங்களிலிருந்துகொண்டு ஒரே சமயத்தில் ஆண்டு வந்ததுண்டு. தலைமைப் பாண்டியனாக இருப்பவர் மதுரையில் இருந்தார்.
         இவர்கள் மட்டுமில்லாமல் வேறு சில பாண்டிய மரபினரும்கூட வேறு சில இடங்களில் இருந்து ஆண்டார்கள். உச்சங்கி பாண்டியர் என்றொரு மரபு இருந்தது. இன்னும் சில பாண்டியக்குடியினர் கங்கைச் சமவெளியில் குடியேறியிருந்தனர். அவர்களின் வழிவந்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். கடல் கடந்து சில அரசுகளையும் பாண்டியர்கள் நிறுவி யிருக்கின்றனர்.
மதுரைக்கு வருவதற்கு முன்பே பாண்டியர்கள் தென்மதுரை, கபாடபுரம், மணலூர் என்னும் நகரங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர். தென்மதுரையும் கபாடபுரமும் கடலுக்குள் மூழ்கிவிட்டன.
இந்த சுந்தர பாண்டியனுக்கு மனவி விந்தியாவல்லி. இருவரும் சேதுவில் கடலாடச் சென்றிருந்தனர். அங்கு ஸ்ரீலட்சுமி அவதரித்திருந்தாள்.
அவளைப் பார்த்தவுடன் சுந்தரபாண்டியனும் விந்தியாவல்லியும் அவளைத் தம்முடைய மகளாக ஏற்றுக்கொண்டு தாங்களே வளர்த்து வந்தனர்.
அவளுக்குத் திருமணப் பருவ வயது வந்தபோது மகாவிஷ்ணு ஒரு சிவ வேதியராக உருவெடுத்து வந்தார். நந்தவனத்தில் மலர் பறித்துக் கொண்டிருந்த கன்னிப்பெண் ஸ்ரீ¢லட்சுமியைக் கரம்பிடித்தார்.
சுந்தரபாண்டியரிடம் ஸ்ரீலட்சுமி முறையிட்டாள். சுந்தரபாண்டியர் வேதியரை விலங்கிட்டுச் சிறையில் அடைத்துவைத்தார்,
மகாவிஷ்ணு தாம் யார் என்பதை சுந்தரபாண்டியரின் கனவில் வந்து அறிவுறுத்தினார்.
பாண்டியனாரும் மனமகிழ்ந்து ஸ்ரீலட்சுமியைப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்தார்.
திருமாலும் அவருக்கு வரம் தந்து சேதுவுக்கு ஸ்ரீலட்சுமியுடன் சென்று அங்கு 'சேதுமாதவன்' என்னும் பெயரில் எழுந்தருளினார்.
இந்த வரலாற்றைச் 'சேது புராணம்' என்னும் நூலில் காணலாம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$