Wednesday 31 August 2011

THUS IT IS....




கழுதை தேய்ந்து........



       'ஆசியாவிலேயே மிகப் பழைமையான'  என்ற சில பெருமைமிக்க விஷயங்கள் கொண்டது சென்னை மாநகர். அவற்றில் ஒன்று சென்னை மியூசியம். நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் முற்பட்டது அந்த மியூசியம். 


எனக்கு எட்டு வயதிருக்கும்போது - ஐம்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக அங்கு சென்றேன். அழைத்து செல்லும்போது 'செத்த காலேஜு'க்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள். அன்று இன்னொரு இடத்துக்கும் சென்றோம். அது 'உயிர்க் காலேஜு'. அதான் மிருகக்காட்சி சாலை. 


மியூசியத்தில் நான் பார்த்தவற்றில் கவனத்தில் இருந்தது ஒரு திமிங்கலத்தின் எலும்புக்கூடு. மேல் சீலிங்கிலிருந்து கம்பிகளின்மூலம் தொங்கிக்கொண்டிருந்தது.                      


அதன் பின்னர் 1972-இல் கடைசியாக ஒரு முறை சென்றேன். அதுவும் 'இந்தா அந்தா' என்று முப்பது ஆண்டுகளாகிவிட்டதே! 
அப்போதும், பாவம் அந்த திமிங்கலம், எலும்புக்கூடாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
புராணக்கதைகளில் வருமே வேதாளம் - தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்குமாம். அது போலவே அந்த திமிங்கலக் கூடும். பாவம். என்ன சாபமோ? யார் கொடுத்த சாபமோ? 
இன்னும் தொங்குகிறதா என்பது தெரியவில்லை. மெட்ராஸ் வாலாக்கள்தாம் சொல்ல வேண்டும்.


இந்த 'செத்த காலேஜை' முதன்முதலில் ஜியாலஜி சம்பந்தப்பட்ட காட்சியகமாகத்தான் ஆரம்பித்தார்கள் போல் நினைவு. அதன் பிறகு மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உடல்களையும் எலும்புக் கூடுககளையும் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் 'செத்த காலேஜு' என்ற பெயர் ஏற்பட்டது. பழஞ்சிலைகள், அரும்பொருட்கள் போன்றவற்றை வைத்தும்கூட அந்தப் பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது.


அது பெற்ற பெயருக்கும் அது கொண்ட பழைமைக்கும் ஏற்ற அளவுக்குப் பழம் பொருட்கள், அரிய பொருட்கள் கிடையாது. அதுவும் கண்ட கண்ட இடத்திலெல்லாம் பழஞ்சிலைகளின் மீது தடுக்கி இடறி விழும் தமிழகத்தின் மியூசியத்தில் அரும்பொருள்கள் இத்தனை குறைவாக இருக்கின்றன என்பது வயிற்றெரிச்சலான விஷயம்தான். அந்த மியூசியத்தில் காணுவதற்கு அரிதாக இருக்கக்கூடியதெல்லாம் அரும்பொருள்கள்தாம்.


நான் கடைசியாகச் சென்றபோது நான் பார்த்த காட்சி இன்னும் பசுமையாகவும் ஒரு வகையில் வேடிக்கையாகவும் இருக்கிறது. 
Incongruous என்று சொல்வார்களே...அதுவும் பல சமயங்களில் வேடிக்கையான விஷயமாகத்தான் இருக்கும்.
நான் பார்த்த காட்சியும் மியூசியத்தின் சூழலில் incongrous-ஆகத்தான் இருந்தது.


அப்போதெல்லாம் உபரியாகக் கிடைத்த நாணயங்களை ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்பார்கள். அவ்வாறு வாங்கப்பட்டவை என்று ஒரு சர்ட்டி·பிக்கேட்டும் கொடுப்பார்கள். 


ஆர்க்காட்டு ரூபாய்கள் அப்போது விற்கப்பட்டன. 


'ஆர்க்காட்டு ரூபாய்' என்பது முகலாய பாதுஷா ஔரங்கசீபின் மகன் பேரன் ஆகியோர் காலத்தில் வெளியிடப்பட்ட - ஷா ஆலம், ஆலம் கீர் ஆகியோர் பெயரால் வெளியிடப்பட்ட வெள்ளி ரூபாய். 
அதில் பழைமையான ரூபாய், ஐந்து மில்லிமீட்டர் கனமும் ஐந்து-ஆறு செண்டிமீட்டர் குறுக்களவும் கொண்டது. இந்த ரூபாயை முகலாயர்களின் கீழிருந்த ஹைதராபாத் நிஜாமும் அவனுக்குக் கீழிருந்த ஆர்க்காட்டு நவாபும் அவர்களின் பிரதிநிதிகளாக விளங்கிய கிழக்கிந்தியக் கும்பினியாரும் கரன்சியாகப் பயன்படுத்தினர். 
தமிழகம் ஆர்க்காட்டு நவாபின் ஆட்சிக்குக் கீழ் வந்தபின்னர் இந்த ரூபாயை அதிகார பூர்வமான கரன்சியாக எல்லாரும் ஏற்றுக்கொண்டனர்.


சிவகங்கைச்சீமையை ஆண்ட மருது சேர்வைக்காரர்களில் மூத்தவரான பெரிய மருது சேர்வைக்காரர் ஆர்க்காட்டு ரூபாயை ஒரே கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவற்றின் மீது வைத்துக்கொண்டு பெருவிரலினால் அழுத்தி வளைத்துவிடுவாராம்.  


ஆனால் பிற்காலத்தில் அந்த ரூபாயின் ஓரத்தை அராவிவிட்டு அந்த ரூபாயைச் சிறியதாக ஆக்கிவிட்டார்கள். 


இந்த மாதிரியான ஆர்க்காட்டு ரூபாய்கள் சென்னை மியூசியத்தில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் விற்பனைக்குக் கிடைத்தன.  


நானும் வாங்குவதற்காகச் சென்றேன். 


அப்போது அந்த நாணயங்கள் நூமிஸ்மேட்டிக்ஸ்  க்யூரேட்டர் ஒருவரின் பொறுப்பில் இருந்தன. 


நான் சென்றபோது அவர் சீரியஸாக ஒரு பெரிய காரியத்தை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தார். 


ஒரு தோல் விரிப்பை மடியில் போட்டுக்கொண்டு ஒரு ஆர்க்காட்டு ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டு அவர் பாட்டுக்கு அராவிக் கொண்டிருந்தார். 


ஏற்கனவே அராவப்பட்ட சங்கதியாயிற்றே. பாட்டோடு பாடாக அவர் பங்குக்குக் கொஞ்சம் அராவிக்கொண்டிருந்தார். ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சம்....யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்.


எனக்கு ஒரு ரூபாயை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.


ஆனால் அன்று கண்ட காட்சி அப்படியே மனதில் நின்றுகொண்டது. 


'இது இங்கே இப்படித்தான் இருக்கும் - Take it or Leave it'. 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday 26 August 2011

WHY CONCEAL?

மறைப்பதன் காரணம்....?


மடற்குழுவிலோ ப்லாகிலோ ·பேஸ்புக்கிலோ எழுதும்போது பல விஷயங்களை முழுமையாகச் சொல்லமுடிவதில்லை. சொல்ல வந்த விஷயங்களைப் பூர்த்தியாக்காமலேயே விடவேண்டியுள்ளது. ஆகவே பல கட்டுரைகள் பூர்த்தியாகாமல் நிற்கும்.
கட்டுரைகளைப் பூர்த்தி செய்யமுடியாமைக்கும் சில காரணங்கள் இருக்கின்றன.
சில விஷயங்களை மறைக்கவேண்டியது மிக அவசியமாகிறது.
ஓர் ஊரில் ஓரிடத்தில் ஒரு மண்டபம். அதில் உள்ள தூண்களில் பெரு விரல் பரிமாணமே கொண்ட சிறு சிறு Miniature தூண்களைச் செதுக்கி யுள்ளார்கள்.
அந்தக் குட்டி தூண்களைச் சுற்றி விரலை விட்டுத் துழாவமுடியும். அதிலும் பல பூவேலைப்பாடுகள் இருக்கும்.
Xylophone என்னும் இசைக்கருவி ஒன்று இருக்கிறது.
அதில் இரும்புக் கலவை, வெண்கலம் போன்றவற்றால் செய்த குழாய்கள், பட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். தட்டினால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு  Note-ஐ ஒலிக்கும். அது ஒரு இசைக்கருவி. ஜலதரங்கம், பியானோ ஆகியவற்றின் அடிப்படையைக் கொண்டது.
இதே மாதிரியாகக் கல்லிலேயே வடித்திருக்கிறார்கள். தட்டினால் வெவ்வேறு ஸ்வரங்களில் ஒலிக்கும். வெவ்வேறு இசைக்கருவிகள் போன்றும் சில குட்டித்தூண்கள் ஒலிக்கும்.
பார்ப்பதற்கு இந்த சூட்சுமம் புரியாது.


அந்த மண்டபத்தைப் பற்றி விரிவாக எழுதினால் என்ன ஆகும்?


காஞ்சி வரதராசப்பெருமாள் கோயிலில் ஓரிடம் இருக்கிறது. அங்கு கூரையின் விதானத்தில் பல்லி ஜோடியை வடித்துள்ளார்கள். அவற்றிற்கு மேல் பொன்னாலும் வெள்ளியாலும் தகடுகள் செய்து போர்த்திருக்கிறார்கள். இவற்றின் நேர்கீழே ஏணி இருக்கிறது. அருகில் ஓர் ஆசாமி மேஜை நாற்காலி போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டு டிக்கெட் விற்றுக்கொண்டிருப்பார். டிக்கெட் வாங்கிக்கொண்ட பின்னர் அந்த ஏணியின் மீது ஏறி, அந்தப் பல்லிகளைத் தடவிக் கொடுக்கலாம். அந்த மாதிரி பல்லிகளைத் தடவினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று நம்புகிறார்கள். 'பார்ப்பதற்கு வசூல், தொடுவதற்கு  வசூல்' என்று சுரண்டிக் கொண்டிருப்பார்கள்.
அந்த மண்டபத்தின் இருப்பிடத்தையும் அதன் விசேஷத் தன்மையையும் வெளியிட்டால் என்ன ஆகும்?
போகிறவர் வருகிறவரெல்லாம் தட்டித் தட்டித் தட்டி....... பாவம்..... பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட பெரும் மன்னர்களின் அரிய சிருஷ்டி ஒரே தலைமுறையில் - சில ஆண்டுகளில் வீணாகிவிடும்.
அல்லது ஏதாவது மராமத்துச் செய்கிறேன் என்று காரணம் காட்டி அந்த மண்டபத்தையே பிரித்து அக்குச் சுக்காக்கிக் காசாக்கி விடுவார்கள்.
புதிய அரிய விஷயத்தை வெளியிட்டால், அது உடனடியாகத் திருடப் படுகிறது. வேறு பெயர்களில் வெளியாகிவிடுகிறது. சில ஆய்வுகளுக்கு அவை அப்படியே Lock, Stock, and Barrel-ஆக எடுக்கப்படுகின்றன. ஆனால் யாருடைய Intellectual Property என்பது மதிக்கப் படுவதில்லை.
ஆகையால்தான் பல விஷயங்களை வெளியிடுவதற்கில்லை.




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Friday 12 August 2011

KAISAR I HIND


கைஸர் இ ஹிந்த்



உலக வரலாற்றில் பிரசித்தி பெற்றவர் ஜூலியஸ் ஸீஸர்.
ரோம சாம்ராஜ்யம் என்பது கிமு. 600- இல் ஏழு குன்றுகளின்மீதிருந்த ஒரு ஊரை மையமாக வைத்து ஏற்பட்ட சாம்ராஜ்யம்.
பல போர்களின்மூலம் விரிவடைந்து கிமு 55 -இல் மேற்கே பிரிட்டன் தீவிலிருந்து தென் ஐரோப்பா முழுவது, வட ஆ·ப்ரிக்கா, துருக்கி, சீரியா பாலஸ்தீனம், ஈராக் ஆகிய பகுதிகள் கொண்ட மிகப் பெரும் சாம்ராஜ்யமாக விளங்கியது.
கிமு 70 இலிருந்து அதன் சக்கரவர்த்தியை ஸீஸர் என்று குறிப்பிடுவது வழக்கமாயிற்று.
ஸீஸர் -Caesar என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்த்னரின் குடிப்பெயர்.
அந்த குடியைச் சேர்ந்தவர்தான் ஜூலியஸ் ஸீஸர். ஸீஸர் என்பது ஜூலியஸின் குடும்பப் பெயர்.
ஜூலியஸ் ஸீஸரை ரோமச் சக்கரவர்த்தியாக ஆக்குவதற்கு அவருடைய நண்பராகிய மார்க்கஸ் அந்த்தோனியஸ் போன்றவர்கள் பெரிதும் முயன்றனர்.
ஆனால் ஜூலியஸ் ஒரு சர்வாதிகாரியாக மட்டுமே விளங்குவதில் திருப்தி கண்டார்.
உண்மையிலேயே அந்தச் சொல் ஸீஸர் என்று உச்சரிக்கப்படக்கூடாது.
அது ஆங்கில வழக்கு.
மூலமொழியாகிய லத்தீனில் அது 'கைஸார்'.
அவருடைய மரணத்துக்குப் பின்னர் அவருடைய அண்ணன் மகனாகிய அக்டேவியனும் மார்க்கஸ் அந்தோனியஸ¤ம் அதிகாரத்துக்கு வந்தனர். அதன்பின்னர் அவர்களுக்குள் நடந்த போரில் அந்தோனியஸ் இறந்தபிறகு அக்டேவியனே தலைமைத்துவத்துக்கு வந்தார்.
அப்போது அவர் அகஸ்டஸ் ஸீஸர் என்ற பெயருடன் பேரரசர் ஆனார். அந்த கால கட்டத்தில் அந்தப் பதவியை ப்ரின்கெப்ஸ் Princeps என்று அழைத்தனர்.
ஆனால் ஸீஸர் என்ற குடும்பப்பெயர் நாளடைவில் பதவியைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. ப்ரின்கெப்ஸ் என்னும் சொல், வழக்கிலிருந்து மறைந்தது.
நீரோ ஸீஸருக்குப் பின்னர் அகஸ்டஸின் குடும்பத்தினரிடமிருந்து ப்ரின்கெப்ஸ் பதவி கைமாறிவிட்டது. வேறு ஆட்கள் பதவிக்கு வந்தார்கள். இருப்பினும் அவர்களையும் ஸீஸர் என்றே குறிப்பிட்டனர்.


பிற்காலத்தில் ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவியின் பெயரும் ரஷ்யச் சக்கரவர்த்தியின் பதவிப் பெயரும் ஸீஸர் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய கைஸர், க்ஸார் என்று வழங்கப்பட்டன.
ஜூலியஸ் ஸீஸரின் தாயின் வயிற்றைக் கீறி அவரை வெளியில் எடுத்தார்களாம். ஆகவே அந்த அறுவை முறையை ஸீஸரியன் என்று அழைக்கலாயினர்.
ஸீஸரியன் என்பது 'ஸீஸர் சம்பந்தமானது' என்று பொருள்படும்.
சமஸ்கிருதத்தில் குரு வம்சத்தினன் கௌரவ என்றும் துருபதன் மகள் த்ரௌபதி என்றும் ஜபலா மகன் ஜாபாலி என்பதுபோல.
ஜூலியஸ் ஸீஸருக்குக் க்லியோபாட்ரா மூலம் ஒரு மகன் இருந்தான்.
அவனுடைய பெயர் என்னவென்று தெரியாது. ஆனால் அவனை ஸிஸாரியன் என்று அழைத்தனர்.


"பிற்காலத்தில் ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவியின் பெயரும் ரஷ்யச் சக்கரவர்த்தியின் பதவிப் பெயரும் ஸீஸர் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய கைஸர், க்ஸார் என்று வழங்கப் பட்டன." என்று எழுதியிருக்கிறேன்.


உருது மொழியிலும் கைஸர் என்னும் சொல் வழங்கியது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி நிர்வாகத்தில் இந்தியா ஒரு காலத்தில் இருந்தது.
விக்டோரியா ராணி காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியைக் கலைத்துவிட்டு பிரிட்டிஷ் அரசின் கீழ் நேரடியாகக் கொண்டுவந்தனர்.
அப்போது இந்தியாவில் நேரடியாக ஆளப்பட்ட பிரதேசங்கள் தவிர சுதேசி மன்னர்கள் ஆட்சியில் இருந்த சமஸ்தானங்களும் இருந்தன.
ஆகவே இந்தியாவைத் தனி சாம்ராஜ்யமாக ஏற்படுத்தி, அதன் சக்கரவர்த்தினியாக விக்டோரியா ராணியைப் பிரகடனப்படுத்தினார்கள்.
இந்தியாவின் சக்கரவர்த்தினி என்னும் பொருல்படும் 'கைஸர் இ ஹிந்த்' - 'Kaisar i Hind' என்னும் சிறப்புப் பட்டத்தைக் கொடுத்தார்கள்.
கைஸர் இ ஹிந்த் என்னும் பெயரில் ஓர் உயர்ந்த விருது ஏற்படுத்தப் பட்டது.
அது அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்களில் ஒருவர் - மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி.


அவருக்குப் பின்னர் அவருடைய மகனாகிய ஏழாம் எட்வர்டு மன்னர் எனப்படும் மொட்டைத்தலை ராசா ஆட்சிக்கு வந்தார்.
அவருடைய விருதுப் பெயர்களில் ஒன்று- 'Kaisar-e-Hind'.
Emperor Of India.
இந்தியாவின் சக்கரவர்த்தி.
அவருடைய பேரர் ஆறாம் ஜார்ஜ் வரைக்கும் இந்தப் பட்டம் நீடித்தது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday 7 August 2011

An Ancient Tamil Custom


சாவா மூவாப் பேராடு


தமிழ்க்கல்வெட்டுக்களில் ஒரு சொற்றொடரைக் காணலாம். 
'சாவா மூவா பேராடு' என்று காணப்படும். 
கோயில்களில் நிறுவப்படும் திருப்பணிகளில் திருநுந்தா விளக்குத் திருப்பணி முக்கியமானது. 


திருநுந்தா விளக்கைத்தான் இப்போது 'தூங்காமாணி விளக்கு' என்றும் 'தூண்டாமணி விளக்கு' என்றும் சொல்கிறோம். 
நுந்துதல் என்றால் தள்ளிவிடுதல் என்று பொருள். திரியைத் தள்ளி விடாமல் - நுந்தி விடாமல் இருப்பதால் நுந்தாவிளக்கு. இந்த வகை விளக்கு இடைவிடாமல் எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கும். அந்த விளக்கின் மேற்புறத்தில் ஒரு கவிழ்த்துவைத்த கலசம்போல் காணப்படும். அது reservoir. அதில்தான் நெய் ஊற்றி நிரப்பப்பட்டிருக்கும். அந்தக் கலசத்திலிருந்து நெய், அதன் அடியில் உள்ள சிறு விளக்குக்கு வரும். அதில் ஒரு சிறிய திரி இருக்கும். அந்தத் திரியை ஏற்றிவைத்திருப்பார்கள். அந்த விளக்கை அணைய விடுவதில்லை. 


திருநுந்தாவிளக்குக்கு நெய் நிறையத் தேவைப்படும். ஆகவே அதற்கு நெய் தினப்படி கிடைப்பதற்காக நிவந்தமாக மாடு அல்லது மாடுகள் கொடுப்பார்கள். இந்த மாடு கறவை மாடாக இருக்கவேண்டும்.

மாடு கிழண்டு போனாலோ, இறந்து போனாலோ அல்லது பால் வற்றிப் போனாலோ வேறொரு பசு கொடுக்கப்படும். இது ஒரு never-ending-chain போல விளங்கும். இதற்காகக் கணிசமான பொருளோ, பொற்காசுகளோ, அல்லது நிலமோ கோயிலுக்குக் கொடுப்பார்கள். அந்த மாட்டின் பராமரிப்பு போக்குவரத்து இத்யாதி விஷயங்களுக்காக.


இவ்வாறு கொடையில் தடுமாற்றமில்லாது கொடுக்கப்படும் மாடுகளை 'சாவா மூவாப் பேராடு' என்று குறிப்பிடுவார்கள். 
பேராடு என்று குறிப்பிடப்படுவது மாடு. இப்போதும்கூட மாட்டைப் பெரிய ஆடு என்று சொல்லும் வழக்கம் தமிழ் முஸ்லிம்களிடையே இருக்கிறது.


அதாவது அந்த நிவந்தத்தில் சம்பந்தப்பட்ட மாடு சாகவும் மாட்டாது, மூப்பாகவும் மாட்டாது என்பது அடிப்படையான் விஷயம். அதுதான் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே - Replacement பண்ணப்பட்டுக் கொண்டே யிருக்கிறதே. 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$