மக்கர், தாஸா மஸாலா
அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் உருது மொழிச் சொற்கள் பலவற்றைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தனர்.
அரசு சம்பந்தப்பட்டவை, சட்ட சம்பந்தப்பட்டவை, உடற்பயிற்சி, விளையாட்டு, போர் போன்ற துறைகளிலெல்லாம் அந்தச் சொற்களை அதிகம் பார்க்கமுடிந்தது. மக்கர், தாஸா மஸாலா என்ற சொற்களைப் பற்றி சொல்வதாக முன்பொரு தடவை எழுதியிருந்தேன்.
இவை இரண்டுமே உருதுச் சொற்கள்.
மக்கர் பண்ணுவது என்பது ஏதாவது ரிப்பேராகி விடுவது, அல்லது இடையூறு செய்வது போன்ற அர்த்தங்களில் வழங்கப்பட்டது.
மதுரையில் ஒரு காலத்தில் ஜட்கா வண்டி ஓடிக்கொண்டிருந்தது.
அது ஒரு ஒற்றைக் குதிரை பூட்டிய கூட்டு வண்டி. முன்னால் ஓட்டுநர் இருப்பார்.
ஒரு பிரம்பில் மாட்டிய சாட்டை, குதிரையின் லகான் இவை கண்ட்ரோலிங் மெக்கானிஸம். இன்னும் உண்டு. கைவிரல்களால் குதிரையின் வாலின் அடிப்பாகத்தைக் கிள்ளிவிடுவார். குதிரையின் கவட்டில் கால்பெருவிரலால் குத்துவார். இவற்றுடன் குதிரை பாஷையில் அதட்டிக்கொண்டிருப்பார்.
ஸ்டீயரிங், பிரேக், அக்ஸெலரேட்டர் எல்லாமே மேற்கூறிய இந்த சங்கதிகளால் நடப்பவைதாம்.
குதிரை பாஷை என்றால் ஏதோ குதிரை ஓட்டுனர் குதிரையிடம் விதம் விதமாகக் கனைப்பார் என்று நினைத்து விடக்கூடும். அப்படியெல்லாம் இல்லை. குதிரையை ஓட்டுபவர்கள் குதிரைகளுடன் பேசுவதற்கு ஒரு பிரத்தியேக பாஷை வைத்திருப்பார்கள். யானை மாவுத்தவர்கள் யானைகளுக்காக ஒரு பாஷை வைத்திருப்பதுபோல்தான். குதிரையின் கனைப்புகளை வைத்து குதிரை தன்னுடைய
எஜமானனுடன் தொடர்பு கொள்ளும்.
குதிரையை ஓட்டுபவரை 'ராவுத்தர்' என்று குறிப்பிடுவார்கள்.
குதிரை ஒழுங்காக ஓடாமல் சண்டித்தனம் பண்ணுவதை "குதிரை மக்கர் செய்கிறது", என்பார்கள்.
களைத்துப்போன குதிரைக்கு சுதாரிப்பு ஏற்படுத்தி வேகமாக ஓடுவதற்கு ஒரு வித மருந்து வைத்திருந்தார்கள்.
அதற்குப் பெயர் தாஜா மசாலா - Taazza Masaala.
அதை வைத்து குதிரையைத் தாஜா பண்ணுகிறார்கள் அல்லவா?
அதில் என்னென்ன சேரும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.
தாஸா மஸாலாவின் ரிஸிப்பி ஜட்கா வண்டிக்காரர்களுக்குள் மட்டுமே புழங்கி வந்தது. இப்போது ஜட்காவோ குதிரை வண்டிகளோ, சாரட்டு வண்டிகளோ இல்லாமற் போய்விட்டன.
அப்படியே அந்தத் தாஸா மஸாலா ரிஸிப்பியும் மறைந்து போய்விட்டது.
ரேஸ் குதிரைகளுக்கு ரம் என்னும் மதுவைக் கொடுப்பது வழக்கம்.
இதுவும் ஒரு பழைய உத்திதான்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய பிரான்மலைப் பகுதியை பறம்புமலை என்று அழைத்தார்கள். அந்த மலை இருந்த நாடு பறம்பு நாடு எனப்பட்டது.
அந்த நாட்டை ஒரு காலத்தில் பாரி வேள் ஆண்டுவந்தார். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைத்தான் சொல்கிறேன்.
அவருடைய மிக நெருங்கிய நண்பர் கபிலர். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய புலவர்களில் ஒருவர். சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.
பாரியின் குதிரை லாயத்தைப் பற்றி அவருடைய பாடல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாரியின் குதிரைகளுக்குக் குடிக்கக் கொடுத்த மது சிந்தியதால் குதிரை லாயமே சகதியாக விளங்கியதாகப் பாடியுள்ளார்.
பாடலைத் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$