Monday 26 September 2011


சப்த சமுத்ராதிபதி-#1

சீனா பல நூற்றாண்டுகளாகக் கடலோடும் கலையை நன்கு கற்றிருந்தனர்.
அவர்கள்தான் காந்தத்தைப் பயன்படுத்தி திசையறியும் கலையை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் என்பார்கள். 
மற்றவர்களிடமும் இருந்ததா என்பதற்கு சான்றுகள் தற்சமயம் இல்லை. 

மலாய் இனத்தவர் தென்கிழக்காசியா முழுவதிலும் பரவி இருக்கின்றனர். 
ஆ·ப்ரிக்காவின் கிழக்கில் இருக்கும் மடகாஸ்கார் தீவிலும் அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே குடியேறிவிட்டனர். 
இந்தோனீசியர்கள் தங்களின் பெருங்கப்பல்களில் ஆ·ப்ரிக்காவின் தென்முனையையும் கடந்து மேற்கில் உள்ள கானா நாட்டிற்குச் சென்றதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பஸி·பிக் மாக்கடலில் உள்ள மிகச் சிறிய தீவுகளில்கூட பாலினீஸியர்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள்.

விஜயநகரப் போரரசில் ஒரு பெரிய கடற்படைத் தளபதி இருந்தார். 
பெயர் லக்கண்ண உடையார். இவரும் இவருடைய அண்ணனாகிய மாதண்ண உடையாரும் ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். 
இவ்வளவுக்கும் அவர்கள் விஜயநகரின் உயர் அதிகாரிகள்தாம். De Facto Rulers என்று இப்போது சொல்கிறோமல்லவா?
இவர்களில் லக்கண்ண உடையாருக்கு 'சத்த சமுத்திராதிபதி' என்னும் சிறப்புப் பெயர் உண்டு. 
லக்ஷ்மணன் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் இலக்குவன் என்று மாறியதைப் போலவே கன்னடத்தில் லக்கண்ணா என்று மாறியிருக்கிறது. 
இதைப் பற்றி நான் பள்ளிமாணவனாக இருந்தபோது என்னுடைய ஆசிரியர் ஒருவர் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை அப்புறம் சொல்கிறேன். 

லக்கண்ண உடையாருக்குச் சத்த சமுத்திராதிபதி - ஏழு கடல்களுக்கும் முழுமுதற் தலைவன் - என்று பட்டப்பெயர் இருந்ததுபோல் இன்னொருவருக்கும் இருந்தது.
அவர் ஒரு சீனர்.
பெயர் செங் ஹோ. 
அட்மிரல் செங் ஹோ என்று அவருடைய பதவியையும் சேர்த்தே சொல்லிச்  சொல்லி, அப்படிச் சொன்னால்தான் 'அவர்தான்' என்று அறிந்து கொள்ள முடியும் என்பதுபோல் அந்த 'அட்மிரல்' பட்டம் ஒட்டிக் கொண்டு விட்டது. 
செங் ஹோவின் அசல் பெயர் மா ஸின் பா.

சீனாவின் மிங் சக்கரவர்த்தியாகிய யோங் லோ சக்கரவர்த்தி மிகப் பெரிய கடற்படையை நிர்மாணித்து, அதைக் கொண்டு உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சீனாவின் மேலாண்மையைப் பிரகடனப் படுத்தி வரவேண்டும் என்று ஆணையிட்டார். 

அதுவரை உலகம் காணாத பெரும் பெரும் கப்பல்களைக் கட்டி, இருபத்து ஏழாயிரம் பேர் மாலுமிகள், வேலையாட்கள், அதிகாரிகள், போராளிகள் ஆகியோரைக் கொண்டு செங் ஹோ கட்டளையை நிறைவேற்றினார். 
செங் ஹோவுக்கு 'Lord Of The Seven Seas' - சப்த சமுத்ராதிபதி என்ற சிறப்புப் பட்டம் உண்டு. 
செங் ஹோவும் லக்கண்ண உடையாரும் கிட்டத்தட்ட சம காலத்தவர்கள்.

மொத்தம் ஏழு பயணங்களை அவரே நேரடியாகக்  கடற்படைக்குத் தலைமை தாங்கி மேற்கொண்டார். 

ஏழாவது  பயணத்தின்போது அவர் நாகைப் பட்டனத்துக்கு அருகில் கப்பலிலேயே இறந்து போனார். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday 18 September 2011

SMOKE CART AND SMOKE PICTURE

புகைவண்டியும் புகைப்படமும்



           Train என்னும் ஊர்தியை புகை வண்டி என்று தமிழில் எழுத ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் புகையையும் நீராவியையும் குப் குப் என்று விட்டுக்கொண்டே சென்றது. சிக்கு புக்கு என்றாலே ட்ரெய்ன் வண்டியைக் குறிக்கக்கூடிய அளவிற்கு அது பரிச்சயமாகிவிட்டது.
ஆனால் இப்போதெல்லாம் ட்ரெய்ன் வண்டி புகையை விட்டுக்கொண்டு செல்வதில்லை. எஞ்சினெல்லாம் இப்போது டீசலில் ஓடுகிறது. அல்லது மின்சாரத்தில் ஓடுகிறது. காந்த சக்தியால் ஓடும் ட்ரெய்ன்களும் இருக்கின்றன.
ஆனாலும் ட்ரெய்னைப் புகைவண்டி என்று சொல்லவில்லையென்றால் சில தமிழ்ப் பற்றாளர்களுக்குக் கோபம் வந்துவிடுக்கிறது.
ரயில் வண்டி என்ற சொல்லும் அதிகமாக வழக்கில் இருந்தது. ஆனால் அதையும் தூய தமிழ்ச் சொல் இல்லையென்று ஒதுக்குவார்கள்.
Rail என்னும் தண்டவாளங்களில் செல்வதால்தான் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ரயில் வண்டி சொல்லலானார்கள். அது இன்றளவுக்கும் புழக்கத்தில் இருந்து வருகிறது. Railways என்ற சொல்லும் பிடித்தபிடியாக இன்னும் இருந்து வருகிறது.
        மலேசியாவில் தண்டவாளத்தைக் 'கம்பிச் சடக்கு' என்று சொல்வார்கள். 'சடக்கு' என்றால் தெரு, வீதி.





Photograph என்பதையும் புகைப் படம் என்று சொல்கிறார்கள். புகைக்கும் அந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
சிலர் நிழற்படம் என்றும் சொல்கிறார்கள். நிழலுக்கு உரிய அர்த்தத்துக்கும் கேமராவின் உட்புறத்தில் விழும் Image-ஜுக்கும் வித்தியாசமுண்டு. அது நிழலல்ல. பிரதிபிம்பம், பிரதிபலிப்பு என்பதுகூட Reflection என்பதைத்தான் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் டிஜிட்டல் சமாச்சாரங்கள் என்றால் அவை எங்கேயோ போய்விட்டன.
இவற்றையெல்லாம் Update செய்யவேண்டுமோ?


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Monday 5 September 2011

OLD TITLES

 பழைய பட்டங்கள்.......

சில ஆண்டுகளுக்கு முன்னர் கேட்கப்பட்டதொரு கேள்வி - பழைய கதை ஒன்றில் வரும் பாத்திரமாகிய 'ராவ்சாகிப் பொன்னம்பலம் பிள்ளை' என்னும் பெயரில் உள்ள ராவ்சாகிபைப் பற்றியது.
'ராவ் சாகிப்' என்பதை எதை குறிக்கிறது?' என்பதே கேள்வியின் சாரம்.

ராவ்சாகிப் என்பது ஒரு விருது.
ராவ்பகதூர் என்ற விருதும் இருந்தது.
திவான் பகதூர் என்பது இன்னொரு விருது.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும்போது தம்முடைய அரசுக்கு விசுவாசமாக இருக்கும் பெரிய மனிதர்களுக்குக் கொடுத்த பட்டம்.
எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதைகளில் வரும் பல சொற்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவற்றில் உள்ள பல சொற்கள் இப்போது வழக்கிழந்து போயின.
அந்த மாதிரி நூல்களைப் படிக்கவேண்டுமென்றால் யாராவது பழைய ஆட்கள் இருந்தால் அவர்களிடம் கேட்கவேண்டிவரும்.
அந்த மாதிரி புத்தகங்களை ரீப்ரிண்ட் போடும்போது இந்த மாதிரி சொற்களுக்கு ஒரு க்லாஸரி போட்டு, வைத்தால் மிகவும் பயனாக இருக்கும்.
மிட்டாதார், மிராசுதார், ஜமீன்தார், சுவான்தார், சிரேஷ்ததார், பட்டா மணியம், முன்சீபு, கர்ணம், தலையாரி, கொத்தவால், சர்க்கீல், திவான்,
தளவாய், பிரதானி, வஸீர், தர்வான், தானாபதி போன்ற பல சொற்கள் அப்படிப் பட்டவை.
கட்டபொம்மன் கதையில் தானாபதி சுப்பிரமணிய பிள்ளை என்பவர் வருவார். பல இடங்களில் அவர் தானாபதியா பிள்ளை என்று குறிப்பிடப் பட்டிருப்பார்.
நாயக்கர் வரலாற்றில் தளவாய் அரியநாத முதலியார் என்பவர் வருவார். அவருடைய வழித்தோன்றல்கள் 'தளவாய் முதலியார்' என்னும் ஒரு தனி கிளைச் சாதியை உருவாக்கிக் கொண்டுவிட்டனர். ரசிகமணி டீகேசி என்னும் டீகே சிதம்பரநாத முதலியார் அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.
கட்டபொம்மனைப் பிடித்தவர் சர்தார் முத்துவைரவ அம்பலம் என்பவர். அவர் புதுக்கோட்டைப் படைகளின் தலைவராக இருந்தார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேஷையா சாஸ்திரிகள் திவானாக இருந்தார். அவர்தான் இன்றைய புதுக்கோட்டை மீண்டும் உருவாக்கினார். அங்கிருக்கும் புதுக்குளத்தையும் ஏற்படுத்தினார்.
தானாபதி என்பவர் யார், தளவாய் என்பவர் யார், சர்தார் யார் என்பது தெரியாமலேயே கதையையோ வரலாற்றையோ படித்துக்கொண்டே போக நேரிடும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$