Friday, 10 June 2011

புராதனக் கடாரத்துக் கல்வெட்டு



புராதனக் கடாரத்துக் கல்வெட்டு

தென்கிழக்காசியாவிலேயே மிகப் புராதனமான கல்வெட்டு ஒன்று மலேசியாவின் பினங்கு மாநிலத்தில் செரோக் தோக்குன் என்னுமிடத்தில் காணப்படுகிறது. 
அதைப் பற்றிய விபரங்களை இங்கே காணலாம்

தமிழில் இங்கேயும் -



ஆங்கிலத்தில் இங்கேயும் - 


எழுதியிருக்கிறேன்.

ஒரு பிரபலமான குறும்பட/செய்திப்படத் தயாரிப்பாளரான முரளி கிருஷ்ணன்,கோலாலும்ப்பூரிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் சுங்கைப் பட்டாணிக்கு வந்து என்னைச் சந்தித்தார்.  இரண்டு நாட்கள் இங்கு இருந்தார்.
பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவரிடம் இந்தக் கல்வெட்டைப் பற்றியும்  கூறினேன். 
உடனேயே அதைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினார். சுங்கைப்பட்டாணியிலிருந்து ஒரு நடை வேகமாகச் சென்றுவிட்டு திரும்பலாம் என்று எண்ணினார்.
நான் அந்தக் கல்வெட்டு இருக்கும் இடத்துக்குச் சென்று பத்தாண்டுகளுக்குமேல் ஆகின்றன. 
சில உடல்நிலைப் பிரச்னைகளால் சில மாதங்களாக எங்குமே செல்வதில்லை. 
அதுவும் சமீபத்தில் இடது முழங்கால் வலியால் நடப்பது, உட்கார்ந்து எழுந்திருப்பது போன்ற அவசிய காரியங்கள்கூட சிரமமாக உள்ளன. 
திடீரென்று எனக்குள் ஓர் உறுத்தல். 
"வலி ஒரு பக்கம் இருக்கட்டும். நீண்ட நாட்களாகப் போகவும் இல்லை. இப்போது போய்ப் பார்ப்போமே", என்ற எண்ணம். 
அவருடன் சென்று, காருக்குள்ளேயே இருந்துகொண்டு பார்க்கலாமே என்ற நோக்கம். 
நானும் வருகிறேன் என்றதும் அவருக்கு ஒரே குதூகலம். ஆச்சரியம், அதிர்ச்சி. 
"டாக்டர், உங்களைப் பார்ப்பதே மிகவும் சிரமம் என்றார்கள். நீங்களே என்னுடன் வந்தீர்கள் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். அதுவும் இந்த நிலையில்!", என்று சொன்னார். 
அந்தக் கல்வெட்டு இருக்கும் இடத்துக்குப் போகும் பாதை மறந்துவிட்டது. மேலும் இப்போதெல்லாம் ஏராளமான வீடமைப்புத் திட்டங்கள் போன்றவற்றால் ஊர்களிலும் பாதைகளிலும் பெரும் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. 
இன்னொரு அன்பருக்கு டெலி·போன் செய்து பாதையைக் கேட்டவண்ணம் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். 
அந்தப் பாறை இருக்கும் இடம் மட்டும் ஒரு சிறிய வெளியாக இருந்தது. அது இருக்கும் இடத்தைக்கூட கண்டுபிடிக்கமுடியவில்லை. 
அந்த இடத்தைச் சுற்றிலும் சந்தனமாதா கோயிலைச் சேர்ந்த அழகிய கட்டடங்கள் ஓங்கி நின்றன. 
எப்படியோ கல்வெட்டு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். 
ஒரு திறந்த கூடத்துக்குள் இப்போது அது இருக்கிறது. முன்பும் அப்படித்தான். ஆனால் புதிய கூடம் மிகச் சிறியதாக இருந்தது. பயன்படுத்தாத ஓடுகளை அங்கு அடுக்கி வைத்திருந்தார்கள். குப்பை, தூசி, மண் என்று மோசமான சூழல்.  
அதைப் பார்த்தபோது மனத்தில் ஒரு பெரும் அடி விழுந்தது. 
யாராரோ அந்தக் கல்வெட்டின் மீதும், அதைச் சுற்றிலும் Graffitti என்னும் விதத்தில் அவரவர் பெயர்களைச் செதுக்கி வைத்திருந்தார்கள். 
கல்வெட்டு பல இடங்களில் உடைந்து பெயர்ந்து போயிருந்தது. சில இடங்களில் சிமெண்ட் பூசியிருந்தார்கள்.
அவரை அந்தக் கல்வெட்டு இருந்த பாறையின் மீது ஏறச்செய்து அந்தக் கல்வெட்டின்மீது தண்ணீரை ஊற்றச் செய்தேன். 
அவ்வாறு செய்தால் கல்வெட்டு எழுத்துக்கள் புலப்படும்.
அதையெல்லாம் வீடியோப் படம் எடுத்துக்கொண்டார்.

        அதன் பிறகு நானே ஏதோ ஒரு தைரியத்தில் அந்தப் பாறையின்மீது ஏறினேன். எந்தெந்தப் பக்கத்தில் வழுக்கும்; எந்தப் பக்கத்தில் கால் ஊன்ற முடியும் என்பதெல்லாம் எனக்கு அத்துப்படி. எப்படி எந்தக் கோணத்தில் அமர்ந்துகொள்ளவேண்டும்; எந்தப் பக்கத்திலிருந்து கீழே  இறங்கவேண்டும் என்ற கணிப்பும் நல்லவேளையாகச் சரியாக இருந்துவிட்டது. ரொம்பவும் பாலன்ஸ் பண்ணித்தான் பாறையில் திரும்புவது, அமர்வது எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தேன்.  என் வயதுக்கும், உடல் வாகுவுக்கும் உடல் நிலைக்கும் இது ஒரு பெரிய சாதனைதான். அதுவும் மூச்சைப் பிடித்துக்கொண்டு, பாறையின் மேலும் பாறைச்சுற்றி வந்தும் பல விஷயங்களை ரிக்கார்டிங்குக்காகப் பேசவேண்டியதாயிற்று.  இது அதைவிடப் பெரிய சாதனை.
மாதாக் கோயிலின் அருகே இன்னும் ஓர் இடத்தையும் படம் எடுத்துக்கொண்டார். 
வேறு சில அபூர்வமான தடையங்கள் அங்கு இருந்தன. 
இப்போது அவற்றைக் காணோம்
மாதாவின் Grotto ஒன்றை அங்கு மூன்றுவாரங்களுக்கு முன்னர் நிறுவி மங்களாசாசனம் செய்திருந்தார்கள். 
தடையங்களைத் தேடிக்கொண்டே சென்ற கார் நேரே அந்த க்ரோட்டோவுக்குத்தான் சென்று நின்றது. அதற்குமேல் போவதற்குப் பாதை கிடையாது.
காளிதாசனுடைய சியாமளா தண்டகத்தின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறான் அல்லவா?
'ஜகத் ஏக மாதா'
'உலகங்கள் அனைத்துக்கும் உரிய ஒரே தாய்'.
'அவள் வேறு, இவள் வேறு' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் காளிதாசன் செய்துவிட்டான்.
திரும்பி வந்துவிட்டோம். 

இத்தனை சிரமங்களுடன் நான் அங்கு சென்றதற்கு அர்த்தமும் பயனும் இருக்கிறது. 
இந்தக் கல்வெட்டு இப்போது இத்தனை சிதிலமாக இருக்கிறது. 
நாளடைவில் இன்னும் சிதிலமாக ஆகும். 
மேலும் அது அப்படி ஆகாதவண்ணம் தடுப்பதற்கு உரிய முயற்சிகளைச் செய்யலாமல்லவா?

நான் தான் அதையும் செய்யவேண்டும். 
வேறு யார் செய்யப்போகிறார்கள்?
        இந்தக் காட்சிகளை YouTube-இல் காணலாம்.  

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 9 June 2011

STRANGE SYMBOL OF MERLION

சிங்கப்பூரின் சிம்ம மகரம்
(MERLION)


        சில காலத்துக்கு முன்னர் கோலாலும்ப்பூர் பத்துமலை யாளியைப் பற்றி பெருமாள் கேட்கவும் இது நினைவுக்கு வந்தது.


சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்று வந்த தமிழகக்காரர் ஒருவரைக் கோலாலும்ப்பூரில் சந்தித்தேன். அவர் ஒரு கேள்வியைக் கேட்டார்:
"சிங்கப்பூரில் ஓரிடத்தில் ஒரு பெரிய சிலை இருக்கிறதே. அது சிங்கம் போல் இருக்கிறது. ஆனால் உடம்பு வேறுமாதிரி இருக்கிறதே?"


நான் சொன்னேன்:
"நீங்கள் ரொம்ப ஆப்ஸர்வண்ட்டாக உள்ள ஆள் போல. ஏனெனில் இந்த சிலையை சிங்கப்பூர்க்காரர்கள்கூட சரியாகக் கவனித்திருக்கமாட்டார்கள். அவர்கள் மிகவும் பரபரப்பானவர்கள். அவர்களின் இயல்பு அது. அவ்வளவு பரபரப்பு.






ராஜேந்திர சோழருடைய கொள்ளுப் பேரனாகிய நீல உத்தமனுடைய சின்னம் அது. 
தலை சிங்கத் தலை. உடல் மகர மீனின் உடல். 
ஆங்கிலத்தில் இதை Merlion என்பார்கள். Mermaid என்ற சொல்லைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா? இடுப்புக்குமேல் அழகிய பெண்னின் உருவம். இடுப்புக்குக் 
கீழே மீனின் உடல். இதிலேயே ஆண் வர்க்கத்தை Mermen என்பார்கள். 
சிங்கப்பூரின் ஆற்றின் முகத்துவாரத்தில் கடல் ஆழமில்லாமல் இருக்கும். அந்த இடத்தில் ஒருவகையான கடற்கோரை மிகுதியாக வளர்ந்திருந்தது. அதை மேய்வதற்காக Dugong எனப்படும் கடற்பசு ஏராளமாக அங்கு வரும். கடற்பசு நெட்டுக்குத்தலாக நிலை நீச்சில் நின்றுகொண்டு தன்னுடைய கன்றுக்கு மனிதர்களைப் போலவே மார்போடு அணைத்துக்கொண்டு பால் கொடுக்கும். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு மனிதப்பெண் தன் குழந்தைக்குப் பால் கொடுப்பதுபோல் தோன்றும். அதிலிருந்து கடற்கன்னி Legend தோன்றியிருக்கலாம் என்று கருதுவார்கள்.
ஆனால் சிங்கப்பூரில் உள்ள சிங்கச்சிலைக்குக் கடற்கன்னி சம்பந்தம் ஏதும் இல்லை. 
நீல உத்தமர் துமாஸிக் என்னும் அந்தத் தீவின் கடற்கரையில் ஒரு சிங்கத்தைப் பார்த்ததாகவும் அந்த இடத்திலேயே ஒரு துறைமுகப் பட்டினத்தை உருவாக்கியதாகவும் மலேசிய வரலாறு சொல்லும். அவர் உண்மையிலேயே பார்த்தது இப்போது உலகில் இல்லாத, பிடரி மயிர் அடர்ந்த, சப்பை முகம் கொண்ட Sea Lion போன்ற ஏதாவது பிராணியைக் கண்டிருக்கலாம். அல்லது டுகாங்கிலேயே ஏதாவது சிங்கத் தோற்றம்கொண்ட அபூர்வ Mutant ஏதாவதைப் பார்த்திருக்கலாம்.
இன்னும் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஏனென்றால் அங்கிருந்து பேச்சு இயல்பாகவே வரலாற்றுக்குத்தானே செல்லும்? அப்படித்தான் சென்றது. வரலாறு என்றாலேயே, பேசுபவர் பேசினால் விரிவாகத்தானே செல்லும்? அப்படித்தான் சென்றது
"விரிவஞ்சி இங்ஙனே விடுத்தனம்" என்று அந்தக் காலத்துத் தமிழ்ப் புலவர்கள் சொல்வார்கள். அதுபோல அவரிடம் சொன்னதையெல்லாம் இங்கே சொல்லவில்லை.
பாலகுமாரன் எழுதப்போகும் கதையில் இதெல்லாம் வரவேண்டுமே? இல்லையென்றால் பூர்த்தியானதாக இராதே? 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 29 May 2011

வெள்ளிப் பாடல்கள்

வெள்ளிப் பாடல்கள்

வெள்ளியம்பலத் தம்பிரான் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒரு பெரிய தமிழறிஞர். பல நூல்களை ஆய்வு செய்து, உரைகளை இயற்றி, பாடம் சொன்னவர். 

பல பண்டைய நூல்களைப் படித்துப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு ஓர் உணர்வு ஏற்படும்.  நூலின் சில இடங்களில் அந்த குறிப்பிட்ட இலக்கியநூலின் கர்த்தா  விளக்கமாக சொல்லியிருக்கமாட்டார். அல்லது பொருள் மயக்கம் ஏற்படும். அல்லது ஏதோ குறைவது போலவும் , சுருக்கமாக இருப்பது போலவும் தோன்றும்.
சிலநூல்களில் சில இடங்களில் அவ்வாறு குறைவு இருப்பதுபோல் தம்பிரானுக்குத் தோன்றினால், அந்தந்த  இடங்களில் , அந்த நூல் பாடிய புலவரின் நடையில் அவராகவே அதிகப் பாடல்களைப் பாடி, இடைச்செருகலாகச் சேர்த்துவிடுவார்.
அந்தப் பாடல்களையும் சேர்த்துப் படிக்கும்போது சுருக்கம் நீங்கி, விரிவும் விளக்கமும் ஏற்படும். 
ஆனால் பல சமயங்களில் தம்பிரானின் சொந்தக்கருத்துக்கள் அந்த இடத்தில் வந்து விழுந்துவிடும். ஒரிஜினல் புலவரின் நடையில் வேறொருவர் பாட முயற்சி செய்த பாடல் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தும் பாடல்களும் இருக்கும். சில பாடல்கள் அப்பட்டமாகத்
தங்களைக் காட்டிக் கொடுத்துவிடும். 
ஆழ்ந்த நூல் புலமை உடையவர்கள், படித்துக்கொண்டே வரும்போது, ஏதோ பிசிரடிப்பதை உணர்ந்து விடுவார்கள்.

வெள்ளியம்பலத் தம்பிரான் அவ்வாறு  எழுதிச் சேர்த்த பாடல்கள் கம்பராமாயணத்திலும் உண்டு. தேவாரத்திலும்கூட உண்டு.  இவற்றையெல்லாம் அடையாளம் கண்டு இவற்றைத் தனியாகப் பிரித்தெடுத்திருக்கிறார்கள். பல பதிப்புகளில் ஒரிஜினல் நூலின்
பின்பகுதியில் பிற்சேர்க்கையாக இப்பாடல்களைப் போட்டிருப்பார்கள்.
இந்தப் பாடல்களை "வெள்ளிப் பாடல்கள்"  என்று அழைப்பார்கள்.

வெள்ளியம்பலத் தம்பிரானின் நோக்கம் நல்ல நோக்கம்தான்.
ஆனால் ஒரு புலவரின்  பெயரால் விளங்கும் நூலில் இடைச்செருகல் செய்து, அதே புலவர் எழுதியதாகத் தோன்றச்செய்தது ஒரு வழுதான்.

Thursday, 26 May 2011

A VERY RARE BOOK ON KAULI SASTRA


கௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்

book kauli sastra


என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட அப்படியே பொலபொலவென்று நொறுங்கக்கூடிய நிலையில் இருக்கின்றன.
சில நூல்கள் மிகவும் அரிய நூல்கள்.
கௌளி சாஸ்திர நூல் ஒன்று இருக்கிறது. சகாதேவர் அருளிச் செய்த கெவுளி சாஸ்திரம்.

ஏன் சகாதேவர்?
பஞ்சபாண்டவர்களில் ஜோதிடத்தில் மிகச் சிறந்த விற்பன்னராக விளங்கியவர் சகாதேவர். அவருடன் கூடப்பிறந்த நகுலன் அசுவ சாஸ்திரத்தில் விற்பன்னர்.
பாரத யுத்தைத் தொடங்குவதற்கு எதிராளியாகிய துரியோதனனுக்கே ஏற்ற நாளும் ஜெயிக்கக்கூடிய லக்கினமும் குறித்துக் கொடுத்தவர் சகாதேவர்.

ஜோதிட சாஸ்திரத்துக்குள் மட்டுமே அறுபத்துநான்கு உட்பிரிவுகள் இருக்கின்றன என்று சொல்வார்கள். ஆரூடம், சரம், சோவி, கௌளி, தும்மல், சகுனம், பட்சி, பல்லி விழுதல், அருள்வாக்கு, உடுக்கு, பம்பை, குடுகுடுப்பை, அஞ்சனம், சொப்பனம், பறவைகளில் கூவல், சாமுத்ரிகா லட்சணம்......
இப்படி இருக்கின்றன. ஏதோ ஞாபகத்துக்கு வந்தவற்றைச் சொன்னேன்.
ஜோதிடத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சகாதேவர் பாண்டித்தியம் பெற்றவராக இருந்திருப்பார் போலும். அவருடைய பெயரால் பல சோதிட நூல்கள் விளங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
இந்த கெவுளி சாஸ்திர நூல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக முற்பட்டு அச்சில் வெளியாகிய நூல்.
ரொம்பவும் நுணுக்கமான பல விஷயங்கள் அடங்கியுள்ளன. எல்லாமே பாடல்களாக இருக்கின்றன.
கெவுளிகளிலேயே ஒவ்வொரு கிழமைக்கு உரிய ஜாதிகள் இருக்கின்றன.

திங்களுக்குச் சொல்லும் ஜாதி -


சங்கரன் அருளினாலே சாற்றுவேன் கெவுளி ஜாதி
பொங்கவே ராஜனாகும் பொருந்தியே ராஜவர்ணம்
தங்கிய முதுகிற் பத்து தழும்புபோல் கீறலுண்டு
இங்கித ஸ்த்ரீயும் தானும் இருப்பரே புசிப்புகொண்டு


செவ்வாய்க்கு -


நண்ணிய ராஜவாசம் நிறத்தினிற் சாம்பல்வர்ணம்
எண்ணிய எட்டுக்கீறல் முதுகினில் இருக்கும் பாரே
வண்மையாய் ஸ்த்ரீயும் தானும் வலமதாய்ப் போஜனங்களுண்டு
புண்ணியர்போலே தட்சணம் பொருந்தியே இருக்கும் பாரே


இப்படியே அத்தனை ஜாதிகளையும் வர்ணிக்கும் பாடல்கள்.
ஒவ்வொரு கிழமைக்கும் எந்தெந்த திக்கிலிருந்து சொன்னால் என்னென்ன பலன் என்று பாடல்கள் சொல்கின்றன.
இந்த மாதிரியிலேயே நாற்பத்திரண்டு பாடல்கள் உண்டு.
பதினாறு திக்கிற்கும் பல்லி சொல்லல் என்னும் இன்னொரு பகுதியும் உண்டு.
அத்துடன் பல்லி விழும் பலனும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆந்தைக்கு என்று ஒரு பகுதியையும் கொடுத்திருக்கிறார்கள்.
ஆந்தை அலறலால் எல்லாமே கெடுதல்தான் என்று நம்புவார்கள். ஆனால் அதனால் நன்மையுமுண்டு.....

சிந்தையது களித்திடுவாய் ரெண்டே சீறல்
சீக்கிரமே நினைத்த பொருள் வந்துகூடும்
விந்தையுடன் சீறல்தான் மூன்றேயாகில்
வஞ்சியரை எப்படியும் புணர்வாயப்பா....

நல்லதும் நிறைய இருக்கிறது.
ஆந்தையென்றால் ஒருவகைப் பயமும் திகிலும் இருக்கும். ஆனால் ஆந்தை அலறலாலும் நன்மையுண்டு.
அருமையான அரிய நூல்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 22 May 2011