Monday 26 September 2011


சப்த சமுத்ராதிபதி-#1

சீனா பல நூற்றாண்டுகளாகக் கடலோடும் கலையை நன்கு கற்றிருந்தனர்.
அவர்கள்தான் காந்தத்தைப் பயன்படுத்தி திசையறியும் கலையை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் என்பார்கள். 
மற்றவர்களிடமும் இருந்ததா என்பதற்கு சான்றுகள் தற்சமயம் இல்லை. 

மலாய் இனத்தவர் தென்கிழக்காசியா முழுவதிலும் பரவி இருக்கின்றனர். 
ஆ·ப்ரிக்காவின் கிழக்கில் இருக்கும் மடகாஸ்கார் தீவிலும் அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே குடியேறிவிட்டனர். 
இந்தோனீசியர்கள் தங்களின் பெருங்கப்பல்களில் ஆ·ப்ரிக்காவின் தென்முனையையும் கடந்து மேற்கில் உள்ள கானா நாட்டிற்குச் சென்றதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பஸி·பிக் மாக்கடலில் உள்ள மிகச் சிறிய தீவுகளில்கூட பாலினீஸியர்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள்.

விஜயநகரப் போரரசில் ஒரு பெரிய கடற்படைத் தளபதி இருந்தார். 
பெயர் லக்கண்ண உடையார். இவரும் இவருடைய அண்ணனாகிய மாதண்ண உடையாரும் ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். 
இவ்வளவுக்கும் அவர்கள் விஜயநகரின் உயர் அதிகாரிகள்தாம். De Facto Rulers என்று இப்போது சொல்கிறோமல்லவா?
இவர்களில் லக்கண்ண உடையாருக்கு 'சத்த சமுத்திராதிபதி' என்னும் சிறப்புப் பெயர் உண்டு. 
லக்ஷ்மணன் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் இலக்குவன் என்று மாறியதைப் போலவே கன்னடத்தில் லக்கண்ணா என்று மாறியிருக்கிறது. 
இதைப் பற்றி நான் பள்ளிமாணவனாக இருந்தபோது என்னுடைய ஆசிரியர் ஒருவர் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை அப்புறம் சொல்கிறேன். 

லக்கண்ண உடையாருக்குச் சத்த சமுத்திராதிபதி - ஏழு கடல்களுக்கும் முழுமுதற் தலைவன் - என்று பட்டப்பெயர் இருந்ததுபோல் இன்னொருவருக்கும் இருந்தது.
அவர் ஒரு சீனர்.
பெயர் செங் ஹோ. 
அட்மிரல் செங் ஹோ என்று அவருடைய பதவியையும் சேர்த்தே சொல்லிச்  சொல்லி, அப்படிச் சொன்னால்தான் 'அவர்தான்' என்று அறிந்து கொள்ள முடியும் என்பதுபோல் அந்த 'அட்மிரல்' பட்டம் ஒட்டிக் கொண்டு விட்டது. 
செங் ஹோவின் அசல் பெயர் மா ஸின் பா.

சீனாவின் மிங் சக்கரவர்த்தியாகிய யோங் லோ சக்கரவர்த்தி மிகப் பெரிய கடற்படையை நிர்மாணித்து, அதைக் கொண்டு உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சீனாவின் மேலாண்மையைப் பிரகடனப் படுத்தி வரவேண்டும் என்று ஆணையிட்டார். 

அதுவரை உலகம் காணாத பெரும் பெரும் கப்பல்களைக் கட்டி, இருபத்து ஏழாயிரம் பேர் மாலுமிகள், வேலையாட்கள், அதிகாரிகள், போராளிகள் ஆகியோரைக் கொண்டு செங் ஹோ கட்டளையை நிறைவேற்றினார். 
செங் ஹோவுக்கு 'Lord Of The Seven Seas' - சப்த சமுத்ராதிபதி என்ற சிறப்புப் பட்டம் உண்டு. 
செங் ஹோவும் லக்கண்ண உடையாரும் கிட்டத்தட்ட சம காலத்தவர்கள்.

மொத்தம் ஏழு பயணங்களை அவரே நேரடியாகக்  கடற்படைக்குத் தலைமை தாங்கி மேற்கொண்டார். 

ஏழாவது  பயணத்தின்போது அவர் நாகைப் பட்டனத்துக்கு அருகில் கப்பலிலேயே இறந்து போனார். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment