Saturday 24 December 2011

BEGGAR'S BEER

பிச்சைக்காரன் பீர்

'சுட்டகோழி சுடாத கோழி'யின் தொடர்பாக பிச்சைக்காரன் கோழி'யைப் பற்றியும் எழுதினேன்.
அதற்கும் ஒரு 'பலேபேஷ்' கிடைத்தபடியால் அந்த மடலுக்குத் துணை மடலாக 'போஜனக் கொறடா'வாக இந்த மடலை எழுதுகிறேன். 
பிச்சைக்காரர்கள் தங்களுக்கென்று பிரத்தியேக பானத்தையும் தயாரிப்பார்கள். 
இதற்குப் பயன்படுவது மரவள்ளிக்கிழங்கு. இந்தக் கிழங்கு மிகவும் அதிகமாகக் காணப்படுவது. அதுபாட்டுக்கு வளர்ந்து கிடக்கும். கீரைவகைகளிலேயே மிகவும் மலிவான கீரை குப்பைக் கீரையும் மரவள்ளிக்கீரையும் முருங்கைக்கீரையும்தான். 
மரவள்ளிக்கிழங்கை நன்றாக மசிய வேகவைத்து, தோலை உரித்து விட்டு, அதைப் பிசைந்து கொள்வார்கள்.
பயற்றமுளை என்றொரு காய்கறி வகை இருக்கிறது. பாசிப்பயறுக்கும் தட்டைப் பயிறுக்கும் இடைப்பட்ட பயறு ஒன்று இருக்கிறது. இதை மலேசியத் தமிழர்கள் பயற்றங்காய் என்பார்கள். இது இவர்களின் முக்கிய துணை வெஞ்சனமாக விளங்குவது. 
பயற்றமுளையின் கொஞ்சம் எடுத்து அதையும் சேர்த்து மரவள்ளிக் கிழங்கு மசியலுடன் சேர்த்துப் பிசைந்து கொள்வார்கள். 
இதை வெந்நீர் ஊற்றிக் கரைப்பார்கள். தேங்காய்த் தண்ணீர் சேர்ப்பார்கள்.
பானையில் இந்தக் கரைசலை வைத்து மூடி வைத்துவிடுவார்கள். 
இரண்டு ஆள் கழித்து அதை அப்படியே வடிகட்டி எடுத்துக் கொள்வார்கள். 
இது ஒருவகை பீயர். 
'பிச்சைக்காரன் பீயர்' என்று வேண்டுமானாலும் பெயர் கொடுக்கலாம்.
Homemade Brew.
"பிச்சைக்காரனுக்கு ஏது வீடு?" என்று கேட்கத் தோன்றும்.




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday 27 November 2011

MAKKAR AND TAZZA MASALA


மக்கர், தாஸா மஸாலா



         அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் உருது மொழிச் சொற்கள் பலவற்றைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தனர்.

அரசு சம்பந்தப்பட்டவை, சட்ட சம்பந்தப்பட்டவை, உடற்பயிற்சி, விளையாட்டு, போர் போன்ற துறைகளிலெல்லாம் அந்தச் சொற்களை அதிகம் பார்க்கமுடிந்தது. 
மக்கர், தாஸா மஸாலா என்ற சொற்களைப் பற்றி சொல்வதாக முன்பொரு தடவை எழுதியிருந்தேன்.
இவை இரண்டுமே உருதுச் சொற்கள். 
மக்கர் பண்ணுவது என்பது ஏதாவது ரிப்பேராகி விடுவது, அல்லது இடையூறு செய்வது போன்ற அர்த்தங்களில் வழங்கப்பட்டது. 
மதுரையில் ஒரு காலத்தில் ஜட்கா வண்டி ஓடிக்கொண்டிருந்தது. 
அது ஒரு ஒற்றைக் குதிரை பூட்டிய கூட்டு வண்டி. முன்னால் ஓட்டுநர் இருப்பார். 
ஒரு பிரம்பில் மாட்டிய சாட்டை, குதிரையின் லகான் இவை கண்ட்ரோலிங் மெக்கானிஸம். இன்னும் உண்டு. கைவிரல்களால் குதிரையின் வாலின் அடிப்பாகத்தைக் கிள்ளிவிடுவார். குதிரையின் கவட்டில் கால்பெருவிரலால் குத்துவார். இவற்றுடன் குதிரை பாஷையில் அதட்டிக்கொண்டிருப்பார். 
ஸ்டீயரிங், பிரேக், அக்ஸெலரேட்டர் எல்லாமே மேற்கூறிய இந்த சங்கதிகளால் நடப்பவைதாம். 
குதிரை பாஷை என்றால் ஏதோ குதிரை ஓட்டுனர் குதிரையிடம் விதம் விதமாகக் கனைப்பார் என்று நினைத்து விடக்கூடும். அப்படியெல்லாம் இல்லை. குதிரையை ஓட்டுபவர்கள் குதிரைகளுடன் பேசுவதற்கு ஒரு பிரத்தியேக பாஷை வைத்திருப்பார்கள். யானை மாவுத்தவர்கள் யானைகளுக்காக ஒரு பாஷை வைத்திருப்பதுபோல்தான். குதிரையின் கனைப்புகளை வைத்து குதிரை தன்னுடைய 
எஜமானனுடன் தொடர்பு கொள்ளும்.

குதிரையை ஓட்டுபவரை 'ராவுத்தர்' என்று குறிப்பிடுவார்கள். 
குதிரை ஒழுங்காக ஓடாமல் சண்டித்தனம் பண்ணுவதை "குதிரை மக்கர் செய்கிறது", என்பார்கள்.
களைத்துப்போன குதிரைக்கு சுதாரிப்பு ஏற்படுத்தி வேகமாக ஓடுவதற்கு ஒரு வித மருந்து வைத்திருந்தார்கள்.
அதற்குப் பெயர் தாஜா மசாலா - Taazza Masaala.
அதை வைத்து குதிரையைத் தாஜா பண்ணுகிறார்கள் அல்லவா? 
அதில் என்னென்ன சேரும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். 
தாஸா மஸாலாவின் ரிஸிப்பி ஜட்கா வண்டிக்காரர்களுக்குள் மட்டுமே புழங்கி வந்தது. இப்போது ஜட்காவோ குதிரை வண்டிகளோ, சாரட்டு வண்டிகளோ இல்லாமற் போய்விட்டன. 
அப்படியே அந்தத் தாஸா மஸாலா ரிஸிப்பியும் மறைந்து போய்விட்டது.
ரேஸ் குதிரைகளுக்கு ரம் என்னும் மதுவைக் கொடுப்பது வழக்கம். 
இதுவும் ஒரு பழைய உத்திதான். 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய பிரான்மலைப் பகுதியை பறம்புமலை என்று அழைத்தார்கள். அந்த மலை இருந்த நாடு பறம்பு நாடு எனப்பட்டது. 
அந்த நாட்டை ஒரு காலத்தில் பாரி வேள் ஆண்டுவந்தார். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைத்தான் சொல்கிறேன்.  
அவருடைய மிக நெருங்கிய நண்பர் கபிலர். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய புலவர்களில் ஒருவர். சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். 
பாரியின் குதிரை லாயத்தைப் பற்றி அவருடைய பாடல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 
பாரியின் குதிரைகளுக்குக் குடிக்கக் கொடுத்த மது சிந்தியதால் குதிரை லாயமே சகதியாக விளங்கியதாகப் பாடியுள்ளார்.
பாடலைத் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday 18 November 2011

WHY SO...

ஏன் இப்படி?

        பல சமயங்களில் யோசனை செய்ததுண்டு.
உடற்பயிற்சி, மல்யுத்தம் போன்றவை சம்பந்தமான வழக்கில் 
உள்ள சொற்கள், உருதுவில் இருக்கின்றன. உடற்பயிற்சியில் 
பயன்படும் கருவிகளின் பெயர்கள்கூட உருதுச்சொற்களாக இருக்கின்றன.


குஸ்தி, 
காட்டா குஸ்தி, 
லடாய், 
பயில்வான், 
வஸ்தாது, 
மஸ்து, 
கட்டுமஸ்து, 
லங்கோடு, 
மோட்டா, 
லண்டி, 
கோதா, 
தண்டால், 
பஸ்கி, 
பல்டி, 
அந்தர்பல்டி, 
கஸரத், 
ஜக்கரித்தல், 
ஜகா வாங்குதல், 
சலாம், 
வரிசை, 
கவாத்து.....
கர்லாக்கட்டை


இப்போது ஞாபகத்துக்கு வந்தவை இவைதான். 




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday 5 October 2011

PEPPER VALUE

மிளகின் மதிப்பு




சில பழைய தமிழ் வரலாற்றுப் புத்தகங்களில் அவற்றின் ஆசிரியர்கள் சில வெளிநாட்டு ஆட்களின் பெயர்களைத் தமிழில் எழுதியிருப்பார்கள்.
ஒரு நூலில் பார்த்தேன்.... கொசுமசு என்று இருந்தது. Cosmas என்பதுதான் இப்படியாகியிருக்கிறது. Hippocrates என்னும் பெயர் கிப்போக்கிரிட்டசு என்று காணப்படுகிறது.
இன்னொரு நூலில் - Herodotus என்பதை கெரத்தோத்தசு என்று ஆசிரியர் எழுதியுள்ளார். Tiberius தைபேரியசு ஆகியிருக்கிறது.
கிப்போக்கிரிட்டசு என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. அவர் இருந்த காலத்தில் சேரநாட்டிலிருந்து ரோம் பேரரசுக்கு ஏராளமாக மிளகு கொண்டுசெல்லப்பட்டது.
ஒரு கீலோ மிளகு அங்கு முப்பத்தாறு வெள்ளி டெனாரியஸ்-Denarius நாணயத்துக்கு விற்கப்பட்டது. இது பிளினி - Pliny சொன்னது.
தமிழகத்தில் குறைந்த விலைக்கு வாங்கி, ரோமாவில் அவ்வளவு விலைக்கு விற்றார்கள்.
ஒரு டெனாரியஸ் நான்கு கிராம் எடையுள்ளது. 
இன்றைய மதிப்பு மூன்றுஞ்சில்லறை யூஎஸ் டாலர்.
அப்படியானால் ஒரு கீலோ மிளகின் விலை இன்றைய மதிப்புக்கு நூற்றுப் பத்து யூஎஸ் டாலர் ஆகிறது.
இந்த வெள்ளி டெனாரியஸ் நாணயத்துக்கு ஒரு தரநிர்ணயம் இருந்தது. அதாவது Standard என்பார்கள். 
சந்தையில் ஒரு டெனாரியஸ் என்பது பத்து கழுதைகளுக்கு சமம். அதாவது ஒரு டெனாரியஸால் பத்து கழுதைகளை வாங்கமுடியும். 
அதனால்தான் அதற்கு டெனாரியஸ் என்று பெயர் ஏற்பட்டது. டெனா - பத்து.
தமிழகத்துடன் மிக மிக விறுவிறுப்பாக வர்த்தகம் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒரு டெனாரியஸ் பதினாறு கழுதைகளை வாங்கக்கூடியதாக இருந்தது.
ஆரம்பத்தில் நாணய மதிப்பை நிர்ணயிப்பதற்குப் பசுக்களைத்தான் வைத்திருந்தார்கள். 
Pecunia என்பது இலத்தீனில் பணத்தைக் குறிக்கும். 
Pecuniary matters என்ற ஆங்கில சொற்றொடர் இதிலிருந்து வந்ததுதான். 
Pecu என்பது இலத்தீனில் பசுவைக் குறிக்கும்.
ராஜஸ்தானிலிருந்து ஸ்வீடனுக்கு ஆரியர்கள் சென்றபோது இந்த சொற்களையெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்று தற்கால இண்டிக் ஹிந்துத்வா ஆட்கள் சொல்லக்கூடும்.
இது இப்பிடியா, அது அப்பிடியா என்பது நம்ம ஆட்கள் எந்தப் பக்கம் சார்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது. 
கலி·போர்னியா பாடப்புத்தகம் மாதிரி.

###############################

Monday 26 September 2011


சப்த சமுத்ராதிபதி-#1

சீனா பல நூற்றாண்டுகளாகக் கடலோடும் கலையை நன்கு கற்றிருந்தனர்.
அவர்கள்தான் காந்தத்தைப் பயன்படுத்தி திசையறியும் கலையை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் என்பார்கள். 
மற்றவர்களிடமும் இருந்ததா என்பதற்கு சான்றுகள் தற்சமயம் இல்லை. 

மலாய் இனத்தவர் தென்கிழக்காசியா முழுவதிலும் பரவி இருக்கின்றனர். 
ஆ·ப்ரிக்காவின் கிழக்கில் இருக்கும் மடகாஸ்கார் தீவிலும் அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே குடியேறிவிட்டனர். 
இந்தோனீசியர்கள் தங்களின் பெருங்கப்பல்களில் ஆ·ப்ரிக்காவின் தென்முனையையும் கடந்து மேற்கில் உள்ள கானா நாட்டிற்குச் சென்றதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பஸி·பிக் மாக்கடலில் உள்ள மிகச் சிறிய தீவுகளில்கூட பாலினீஸியர்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள்.

விஜயநகரப் போரரசில் ஒரு பெரிய கடற்படைத் தளபதி இருந்தார். 
பெயர் லக்கண்ண உடையார். இவரும் இவருடைய அண்ணனாகிய மாதண்ண உடையாரும் ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். 
இவ்வளவுக்கும் அவர்கள் விஜயநகரின் உயர் அதிகாரிகள்தாம். De Facto Rulers என்று இப்போது சொல்கிறோமல்லவா?
இவர்களில் லக்கண்ண உடையாருக்கு 'சத்த சமுத்திராதிபதி' என்னும் சிறப்புப் பெயர் உண்டு. 
லக்ஷ்மணன் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் இலக்குவன் என்று மாறியதைப் போலவே கன்னடத்தில் லக்கண்ணா என்று மாறியிருக்கிறது. 
இதைப் பற்றி நான் பள்ளிமாணவனாக இருந்தபோது என்னுடைய ஆசிரியர் ஒருவர் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை அப்புறம் சொல்கிறேன். 

லக்கண்ண உடையாருக்குச் சத்த சமுத்திராதிபதி - ஏழு கடல்களுக்கும் முழுமுதற் தலைவன் - என்று பட்டப்பெயர் இருந்ததுபோல் இன்னொருவருக்கும் இருந்தது.
அவர் ஒரு சீனர்.
பெயர் செங் ஹோ. 
அட்மிரல் செங் ஹோ என்று அவருடைய பதவியையும் சேர்த்தே சொல்லிச்  சொல்லி, அப்படிச் சொன்னால்தான் 'அவர்தான்' என்று அறிந்து கொள்ள முடியும் என்பதுபோல் அந்த 'அட்மிரல்' பட்டம் ஒட்டிக் கொண்டு விட்டது. 
செங் ஹோவின் அசல் பெயர் மா ஸின் பா.

சீனாவின் மிங் சக்கரவர்த்தியாகிய யோங் லோ சக்கரவர்த்தி மிகப் பெரிய கடற்படையை நிர்மாணித்து, அதைக் கொண்டு உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சீனாவின் மேலாண்மையைப் பிரகடனப் படுத்தி வரவேண்டும் என்று ஆணையிட்டார். 

அதுவரை உலகம் காணாத பெரும் பெரும் கப்பல்களைக் கட்டி, இருபத்து ஏழாயிரம் பேர் மாலுமிகள், வேலையாட்கள், அதிகாரிகள், போராளிகள் ஆகியோரைக் கொண்டு செங் ஹோ கட்டளையை நிறைவேற்றினார். 
செங் ஹோவுக்கு 'Lord Of The Seven Seas' - சப்த சமுத்ராதிபதி என்ற சிறப்புப் பட்டம் உண்டு. 
செங் ஹோவும் லக்கண்ண உடையாரும் கிட்டத்தட்ட சம காலத்தவர்கள்.

மொத்தம் ஏழு பயணங்களை அவரே நேரடியாகக்  கடற்படைக்குத் தலைமை தாங்கி மேற்கொண்டார். 

ஏழாவது  பயணத்தின்போது அவர் நாகைப் பட்டனத்துக்கு அருகில் கப்பலிலேயே இறந்து போனார். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday 18 September 2011

SMOKE CART AND SMOKE PICTURE

புகைவண்டியும் புகைப்படமும்



           Train என்னும் ஊர்தியை புகை வண்டி என்று தமிழில் எழுத ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் புகையையும் நீராவியையும் குப் குப் என்று விட்டுக்கொண்டே சென்றது. சிக்கு புக்கு என்றாலே ட்ரெய்ன் வண்டியைக் குறிக்கக்கூடிய அளவிற்கு அது பரிச்சயமாகிவிட்டது.
ஆனால் இப்போதெல்லாம் ட்ரெய்ன் வண்டி புகையை விட்டுக்கொண்டு செல்வதில்லை. எஞ்சினெல்லாம் இப்போது டீசலில் ஓடுகிறது. அல்லது மின்சாரத்தில் ஓடுகிறது. காந்த சக்தியால் ஓடும் ட்ரெய்ன்களும் இருக்கின்றன.
ஆனாலும் ட்ரெய்னைப் புகைவண்டி என்று சொல்லவில்லையென்றால் சில தமிழ்ப் பற்றாளர்களுக்குக் கோபம் வந்துவிடுக்கிறது.
ரயில் வண்டி என்ற சொல்லும் அதிகமாக வழக்கில் இருந்தது. ஆனால் அதையும் தூய தமிழ்ச் சொல் இல்லையென்று ஒதுக்குவார்கள்.
Rail என்னும் தண்டவாளங்களில் செல்வதால்தான் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ரயில் வண்டி சொல்லலானார்கள். அது இன்றளவுக்கும் புழக்கத்தில் இருந்து வருகிறது. Railways என்ற சொல்லும் பிடித்தபிடியாக இன்னும் இருந்து வருகிறது.
        மலேசியாவில் தண்டவாளத்தைக் 'கம்பிச் சடக்கு' என்று சொல்வார்கள். 'சடக்கு' என்றால் தெரு, வீதி.





Photograph என்பதையும் புகைப் படம் என்று சொல்கிறார்கள். புகைக்கும் அந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
சிலர் நிழற்படம் என்றும் சொல்கிறார்கள். நிழலுக்கு உரிய அர்த்தத்துக்கும் கேமராவின் உட்புறத்தில் விழும் Image-ஜுக்கும் வித்தியாசமுண்டு. அது நிழலல்ல. பிரதிபிம்பம், பிரதிபலிப்பு என்பதுகூட Reflection என்பதைத்தான் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் டிஜிட்டல் சமாச்சாரங்கள் என்றால் அவை எங்கேயோ போய்விட்டன.
இவற்றையெல்லாம் Update செய்யவேண்டுமோ?


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Monday 5 September 2011

OLD TITLES

 பழைய பட்டங்கள்.......

சில ஆண்டுகளுக்கு முன்னர் கேட்கப்பட்டதொரு கேள்வி - பழைய கதை ஒன்றில் வரும் பாத்திரமாகிய 'ராவ்சாகிப் பொன்னம்பலம் பிள்ளை' என்னும் பெயரில் உள்ள ராவ்சாகிபைப் பற்றியது.
'ராவ் சாகிப்' என்பதை எதை குறிக்கிறது?' என்பதே கேள்வியின் சாரம்.

ராவ்சாகிப் என்பது ஒரு விருது.
ராவ்பகதூர் என்ற விருதும் இருந்தது.
திவான் பகதூர் என்பது இன்னொரு விருது.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும்போது தம்முடைய அரசுக்கு விசுவாசமாக இருக்கும் பெரிய மனிதர்களுக்குக் கொடுத்த பட்டம்.
எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதைகளில் வரும் பல சொற்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவற்றில் உள்ள பல சொற்கள் இப்போது வழக்கிழந்து போயின.
அந்த மாதிரி நூல்களைப் படிக்கவேண்டுமென்றால் யாராவது பழைய ஆட்கள் இருந்தால் அவர்களிடம் கேட்கவேண்டிவரும்.
அந்த மாதிரி புத்தகங்களை ரீப்ரிண்ட் போடும்போது இந்த மாதிரி சொற்களுக்கு ஒரு க்லாஸரி போட்டு, வைத்தால் மிகவும் பயனாக இருக்கும்.
மிட்டாதார், மிராசுதார், ஜமீன்தார், சுவான்தார், சிரேஷ்ததார், பட்டா மணியம், முன்சீபு, கர்ணம், தலையாரி, கொத்தவால், சர்க்கீல், திவான்,
தளவாய், பிரதானி, வஸீர், தர்வான், தானாபதி போன்ற பல சொற்கள் அப்படிப் பட்டவை.
கட்டபொம்மன் கதையில் தானாபதி சுப்பிரமணிய பிள்ளை என்பவர் வருவார். பல இடங்களில் அவர் தானாபதியா பிள்ளை என்று குறிப்பிடப் பட்டிருப்பார்.
நாயக்கர் வரலாற்றில் தளவாய் அரியநாத முதலியார் என்பவர் வருவார். அவருடைய வழித்தோன்றல்கள் 'தளவாய் முதலியார்' என்னும் ஒரு தனி கிளைச் சாதியை உருவாக்கிக் கொண்டுவிட்டனர். ரசிகமணி டீகேசி என்னும் டீகே சிதம்பரநாத முதலியார் அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.
கட்டபொம்மனைப் பிடித்தவர் சர்தார் முத்துவைரவ அம்பலம் என்பவர். அவர் புதுக்கோட்டைப் படைகளின் தலைவராக இருந்தார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேஷையா சாஸ்திரிகள் திவானாக இருந்தார். அவர்தான் இன்றைய புதுக்கோட்டை மீண்டும் உருவாக்கினார். அங்கிருக்கும் புதுக்குளத்தையும் ஏற்படுத்தினார்.
தானாபதி என்பவர் யார், தளவாய் என்பவர் யார், சர்தார் யார் என்பது தெரியாமலேயே கதையையோ வரலாற்றையோ படித்துக்கொண்டே போக நேரிடும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$