Sunday 7 August 2011

An Ancient Tamil Custom


சாவா மூவாப் பேராடு


தமிழ்க்கல்வெட்டுக்களில் ஒரு சொற்றொடரைக் காணலாம். 
'சாவா மூவா பேராடு' என்று காணப்படும். 
கோயில்களில் நிறுவப்படும் திருப்பணிகளில் திருநுந்தா விளக்குத் திருப்பணி முக்கியமானது. 


திருநுந்தா விளக்கைத்தான் இப்போது 'தூங்காமாணி விளக்கு' என்றும் 'தூண்டாமணி விளக்கு' என்றும் சொல்கிறோம். 
நுந்துதல் என்றால் தள்ளிவிடுதல் என்று பொருள். திரியைத் தள்ளி விடாமல் - நுந்தி விடாமல் இருப்பதால் நுந்தாவிளக்கு. இந்த வகை விளக்கு இடைவிடாமல் எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கும். அந்த விளக்கின் மேற்புறத்தில் ஒரு கவிழ்த்துவைத்த கலசம்போல் காணப்படும். அது reservoir. அதில்தான் நெய் ஊற்றி நிரப்பப்பட்டிருக்கும். அந்தக் கலசத்திலிருந்து நெய், அதன் அடியில் உள்ள சிறு விளக்குக்கு வரும். அதில் ஒரு சிறிய திரி இருக்கும். அந்தத் திரியை ஏற்றிவைத்திருப்பார்கள். அந்த விளக்கை அணைய விடுவதில்லை. 


திருநுந்தாவிளக்குக்கு நெய் நிறையத் தேவைப்படும். ஆகவே அதற்கு நெய் தினப்படி கிடைப்பதற்காக நிவந்தமாக மாடு அல்லது மாடுகள் கொடுப்பார்கள். இந்த மாடு கறவை மாடாக இருக்கவேண்டும்.

மாடு கிழண்டு போனாலோ, இறந்து போனாலோ அல்லது பால் வற்றிப் போனாலோ வேறொரு பசு கொடுக்கப்படும். இது ஒரு never-ending-chain போல விளங்கும். இதற்காகக் கணிசமான பொருளோ, பொற்காசுகளோ, அல்லது நிலமோ கோயிலுக்குக் கொடுப்பார்கள். அந்த மாட்டின் பராமரிப்பு போக்குவரத்து இத்யாதி விஷயங்களுக்காக.


இவ்வாறு கொடையில் தடுமாற்றமில்லாது கொடுக்கப்படும் மாடுகளை 'சாவா மூவாப் பேராடு' என்று குறிப்பிடுவார்கள். 
பேராடு என்று குறிப்பிடப்படுவது மாடு. இப்போதும்கூட மாட்டைப் பெரிய ஆடு என்று சொல்லும் வழக்கம் தமிழ் முஸ்லிம்களிடையே இருக்கிறது.


அதாவது அந்த நிவந்தத்தில் சம்பந்தப்பட்ட மாடு சாகவும் மாட்டாது, மூப்பாகவும் மாட்டாது என்பது அடிப்படையான் விஷயம். அதுதான் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே - Replacement பண்ணப்பட்டுக் கொண்டே யிருக்கிறதே. 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. மீண்டும் ஒரு புதிய செய்தியை அறியப் பெற்றேன்! தங்கள் பதிவுகள் எல்லாம் “சாவா மூவாப் பேரேடுகள்” தாம்!

    முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete