Wednesday 31 August 2011

THUS IT IS....




கழுதை தேய்ந்து........



       'ஆசியாவிலேயே மிகப் பழைமையான'  என்ற சில பெருமைமிக்க விஷயங்கள் கொண்டது சென்னை மாநகர். அவற்றில் ஒன்று சென்னை மியூசியம். நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் முற்பட்டது அந்த மியூசியம். 


எனக்கு எட்டு வயதிருக்கும்போது - ஐம்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக அங்கு சென்றேன். அழைத்து செல்லும்போது 'செத்த காலேஜு'க்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள். அன்று இன்னொரு இடத்துக்கும் சென்றோம். அது 'உயிர்க் காலேஜு'. அதான் மிருகக்காட்சி சாலை. 


மியூசியத்தில் நான் பார்த்தவற்றில் கவனத்தில் இருந்தது ஒரு திமிங்கலத்தின் எலும்புக்கூடு. மேல் சீலிங்கிலிருந்து கம்பிகளின்மூலம் தொங்கிக்கொண்டிருந்தது.                      


அதன் பின்னர் 1972-இல் கடைசியாக ஒரு முறை சென்றேன். அதுவும் 'இந்தா அந்தா' என்று முப்பது ஆண்டுகளாகிவிட்டதே! 
அப்போதும், பாவம் அந்த திமிங்கலம், எலும்புக்கூடாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
புராணக்கதைகளில் வருமே வேதாளம் - தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்குமாம். அது போலவே அந்த திமிங்கலக் கூடும். பாவம். என்ன சாபமோ? யார் கொடுத்த சாபமோ? 
இன்னும் தொங்குகிறதா என்பது தெரியவில்லை. மெட்ராஸ் வாலாக்கள்தாம் சொல்ல வேண்டும்.


இந்த 'செத்த காலேஜை' முதன்முதலில் ஜியாலஜி சம்பந்தப்பட்ட காட்சியகமாகத்தான் ஆரம்பித்தார்கள் போல் நினைவு. அதன் பிறகு மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உடல்களையும் எலும்புக் கூடுககளையும் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் 'செத்த காலேஜு' என்ற பெயர் ஏற்பட்டது. பழஞ்சிலைகள், அரும்பொருட்கள் போன்றவற்றை வைத்தும்கூட அந்தப் பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது.


அது பெற்ற பெயருக்கும் அது கொண்ட பழைமைக்கும் ஏற்ற அளவுக்குப் பழம் பொருட்கள், அரிய பொருட்கள் கிடையாது. அதுவும் கண்ட கண்ட இடத்திலெல்லாம் பழஞ்சிலைகளின் மீது தடுக்கி இடறி விழும் தமிழகத்தின் மியூசியத்தில் அரும்பொருள்கள் இத்தனை குறைவாக இருக்கின்றன என்பது வயிற்றெரிச்சலான விஷயம்தான். அந்த மியூசியத்தில் காணுவதற்கு அரிதாக இருக்கக்கூடியதெல்லாம் அரும்பொருள்கள்தாம்.


நான் கடைசியாகச் சென்றபோது நான் பார்த்த காட்சி இன்னும் பசுமையாகவும் ஒரு வகையில் வேடிக்கையாகவும் இருக்கிறது. 
Incongruous என்று சொல்வார்களே...அதுவும் பல சமயங்களில் வேடிக்கையான விஷயமாகத்தான் இருக்கும்.
நான் பார்த்த காட்சியும் மியூசியத்தின் சூழலில் incongrous-ஆகத்தான் இருந்தது.


அப்போதெல்லாம் உபரியாகக் கிடைத்த நாணயங்களை ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்பார்கள். அவ்வாறு வாங்கப்பட்டவை என்று ஒரு சர்ட்டி·பிக்கேட்டும் கொடுப்பார்கள். 


ஆர்க்காட்டு ரூபாய்கள் அப்போது விற்கப்பட்டன. 


'ஆர்க்காட்டு ரூபாய்' என்பது முகலாய பாதுஷா ஔரங்கசீபின் மகன் பேரன் ஆகியோர் காலத்தில் வெளியிடப்பட்ட - ஷா ஆலம், ஆலம் கீர் ஆகியோர் பெயரால் வெளியிடப்பட்ட வெள்ளி ரூபாய். 
அதில் பழைமையான ரூபாய், ஐந்து மில்லிமீட்டர் கனமும் ஐந்து-ஆறு செண்டிமீட்டர் குறுக்களவும் கொண்டது. இந்த ரூபாயை முகலாயர்களின் கீழிருந்த ஹைதராபாத் நிஜாமும் அவனுக்குக் கீழிருந்த ஆர்க்காட்டு நவாபும் அவர்களின் பிரதிநிதிகளாக விளங்கிய கிழக்கிந்தியக் கும்பினியாரும் கரன்சியாகப் பயன்படுத்தினர். 
தமிழகம் ஆர்க்காட்டு நவாபின் ஆட்சிக்குக் கீழ் வந்தபின்னர் இந்த ரூபாயை அதிகார பூர்வமான கரன்சியாக எல்லாரும் ஏற்றுக்கொண்டனர்.


சிவகங்கைச்சீமையை ஆண்ட மருது சேர்வைக்காரர்களில் மூத்தவரான பெரிய மருது சேர்வைக்காரர் ஆர்க்காட்டு ரூபாயை ஒரே கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவற்றின் மீது வைத்துக்கொண்டு பெருவிரலினால் அழுத்தி வளைத்துவிடுவாராம்.  


ஆனால் பிற்காலத்தில் அந்த ரூபாயின் ஓரத்தை அராவிவிட்டு அந்த ரூபாயைச் சிறியதாக ஆக்கிவிட்டார்கள். 


இந்த மாதிரியான ஆர்க்காட்டு ரூபாய்கள் சென்னை மியூசியத்தில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் விற்பனைக்குக் கிடைத்தன.  


நானும் வாங்குவதற்காகச் சென்றேன். 


அப்போது அந்த நாணயங்கள் நூமிஸ்மேட்டிக்ஸ்  க்யூரேட்டர் ஒருவரின் பொறுப்பில் இருந்தன. 


நான் சென்றபோது அவர் சீரியஸாக ஒரு பெரிய காரியத்தை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தார். 


ஒரு தோல் விரிப்பை மடியில் போட்டுக்கொண்டு ஒரு ஆர்க்காட்டு ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டு அவர் பாட்டுக்கு அராவிக் கொண்டிருந்தார். 


ஏற்கனவே அராவப்பட்ட சங்கதியாயிற்றே. பாட்டோடு பாடாக அவர் பங்குக்குக் கொஞ்சம் அராவிக்கொண்டிருந்தார். ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சம்....யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்.


எனக்கு ஒரு ரூபாயை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.


ஆனால் அன்று கண்ட காட்சி அப்படியே மனதில் நின்றுகொண்டது. 


'இது இங்கே இப்படித்தான் இருக்கும் - Take it or Leave it'. 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment