Sunday 19 June 2011

SWORD OF SHIVAJI


பவானி தேவி தந்த சிவாஜி வாள்


இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டுபோகப்பட்ட அரிய பொருள்கள் அனேகம். கணக்கில் அடங்கமாட்டா. ஏனெனில் அதையெல்லாம் கணக்கெடுக்கக்கூடிய அளவில் எடுத்துச் செல்லப்படவில்லை. அள்ளிக் கொண்டு சென்றார்கள். எத்தனையோ யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் தூக்கிச்சென்றிருக்கின்றன!
சாதாரணமாக மக்களுக்குத் தெரிவது கோகினூர் வைரமும் மயிலாசனமும்தான்.
இப்போது வெளிநாட்டில் இருக்கும் பொருள்களின் பட்டியலே மிகப் பெரிய பட்டியல்.
அதில் சிவாஜியின் வாளும் இருக்கிறது.

சிவாஜி ஒரு சாக்தர். தாந்திரீக வழிபாட்டில் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. அவருக்கு இரண்டு முறை முடிசூட்டும் வைபவம் நடந்தது. அதில் ஒன்று தாந்திரீக முறையில் நடந்தது.

ஆஞ்சநேய உபாசகராகிய ஸ்மார்த்த ராமதாசர் அவருடைய குரு.


ஸ்மார்த்த ராமதாசர் எப்படி ஆஞ்சநேயரை உபசனா மூர்த்தியாக வசப்படுத்திக்கொண்டார் என்பது ஒரு ரசமான வரலாறு.
சிவாஜி அம்பாள் பவானியின் வழிபாட்டைச் சிறப்பாகச் செய்துவந்தார்.
முகலாயரை அடக்குவதற்காக அவருக்கு பவானி அம்பாள் ஒரு வாளைத் தந்திருக்கிறாள்.



அந்த வாள் சிவாஜிக்கு மனோதைரியத்தையும் மன உறுதியையும் தொடர்ந்த வெற்றிகளையும் கடைசிவரைக்கும் கொடுத்துவந்தது.


சிவாஜிக்குப் பிறகு அவருடைய வாரிசுகளான பான்ஸ்லே மன்னர்கள் வலுக்குறைந்து போய் பெயரளவில் ஆண்டுவந்தனர்.
உண்மையான அதிகாரமும் பலமும் பேஷ்வா எனப்படும் அமைச்சர்/தளபதி/தனாதிகாரி/கவர்னர் ஆகிய பதவிகளின் கூட்டைக் கையில் வைத்திருந்த ஆட்களிடம்தான் இருந்தது.
அத்துடன் படைபலம் வைத்திருந்த ஆளுனர்கள், படைத்தலவர்கள் முதலியோரிடமும் இருந்தது. ஸிந்தியா, ஹோல்க்கார், கெய்க்வாட் போன்றோர் இந்த வட்டத்தில் அடங்குவர். இன்னும் பல நூற்றுக்கணக்கான மராத்தியர்கள் ஆங்காங்கு ஊர்களையும் பிரதேசங்களையும் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுவந்தனர்.
பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டபோது நூற்றுக்கும் மேற்பட்ட மராத்திய சமஸ்தானங்கள் இருந்தன. இன்னும் ஜமீன்கள் வேறு. பதினெட்டாம் நூற்றாண்டில் இவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அது படிப்படியாகக் குறைந்துவிட்டது. 1857-இல் வெகுவாகக் குறைக்கப் பட்டுவிட்டது.
ஜான்ஸி போன்ற நாடுகள் பிரிட்டிஷாரால் பிடுங்கிக்கொள்ளப்பட்டு விட்டன.
இந்தப் பானிப்பட்டும் ஈஸ்ட் இண்டியா கம்பெனியும் மட்டுமில்லை யென்றால் நாமெல்லாம் கீற்றுநாமத்தைப் போட்டுக் கொண்டு மராத்தி பாஷையைப் பேசிக்கொண்டிருப்போம்.
பான்ஸ்லேக்களின் ஆட்சியில் சத்தாரா நாடு இருந்தது. இரண்டு மூன்று தலைமுறைகள் கழித்து சத்தாராவிலிருந்து கோல்ஹாப்பூர் பிரிந்துவிட்டது. அதையும் பான்ஸ்லேக்களின் ஒரு கிளையினர் ஆண்டனர்.


கோல்ஹாப்பூர் ராஜா வசம் சிவாஜியின் வாள் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் அந்த வம்சத்தைச் சேர்ந்த ஓர் அரசர் அதனை 'மொட்டைத்தலை மவராசா' என்று அன்பாகக் குறிப்பிடப்படும் ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்திக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்.
அம்பாள் பவானி கொடுத்த கத்தி அது!
என்ன பிரமாதம்! அம்பாள் பவானியே அம்புட்டிருந்தால் அந்த ராஜா அவளையும்கூட அன்பளிப்பாக லண்டனுக்கு அனுப்பியிருப்பான், அந்த தோஸ்த்தி லண்டன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. ஸ்மார்த்த ராமதாஸ் !
    இப்பெயர் புதிதாக உள்ளது.

    ‘ஜய் ரகுவீர ஸமர்த்த’ என்று அவர் உரக்கக் கூறி வந்ததால் அவருக்கு ‘ஸமர்த்த ராம்தாஸ்’ எனப்பட்டார்.

    ’समर्थ रामदास’ என்றே தேடுபொறியிலும் அகப்படுகிறது

    http://hi.wikipedia.org/wiki/%E0%A4%B8%E0%A4%AE%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%A5_%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%A6%E0%A4%BE%E0%A4%B8

    வழக்கப்படி தகவல்கள் எல்லாமே அருமை



    தேவ்

    ReplyDelete